வியாழன், 26 டிசம்பர், 2024

நேரிசை வெண்பா


வேண்டும் பொழுதெடுப்பாய் வேல்.!
~~~~~~~~~~~~***~~~~~~~~~~~~

ஆதிக்கோன் இத்தமிழே ஆண்டோர்தாம் சர்வலோகம்
ஏதிலியாய் அல்லலுற்றோம் ஏக்கத்தின் - மீதிலே
வேண்டா மதசாதி வேற்றுமைகள் நீக்கிடநீ
வேண்டும் பொழுதெடுப்பாய் வேல்.!

✍️வரிகள்: சிறீ அருணன்


வியாழன், 19 டிசம்பர், 2024

வஞ்சி விருத்தம்


மண்ணே உன்னில் மாண்டுளன்று
விண்ணே போன வீரமிகோர்
கண்ணே தமிழென் காத்திடவே
அண்ணே என்று ஆர்பரித்தோம்!


~~~~~~*****~~~~~

பாடல்: சிறி அருணன்

                       ********************

ஈடாய் எதுவு மில்லாத

ஏடா யிரங்கள் எழிலூட்டும்

தேடாச் செல்வச் செந்தமிழை

நாடா தோரே நலிவாரே!

                           --பாவலர் மா.வரதராசன்

கருத்தூன்றுக.:

மேற்கண்ட பாடல் "வஞ்சி விருத்தம்" ஆகும். 

மிகவும் எளிதான இவ்விருத்தம் சிந்தடிகளால் (முச்சீர் அடிகளால்) அமையும்.

அளவொத்த சிந்தடிகள் என்பதே குறிப்பு. எனவே இன்ன சீர்கள்தாம் வர வேண்டும் என்ற வரைறையில்லை. எந்த வித அமைப்பிலும் அமைத்து எழுதலாம்.

நாம் பயிற்சிக்கு,

தேமா, மா, காய் என்ற அமைப்பை மட்டும் எழுதலாம்.

பொது இலக்கணம்.

*அளவொத்த மூன்று சீர்கள் கொண்டதாய்,

*நான்கு அடிகள் பெற்று,

* நான்டிகளும் ஒரே எதுகையைப் பெற்றும்,

* முடிந்தால் பொழிப்பு மோனை பெற்று (கட்டாயமில்லை) (சான்று பாடலில் வந்துள்ளதைப் பார்க்க) 

வருவது "வஞ்சி விருத்தம் " ஆகும்.

ஓரடிக்கு, முதற்சீர் தேமாவாகவும், இரண்டாம் சீர் தேமா, புளிமா இவற்றில் ஒன்றும், மூன்றாம் சீர் காய்ச்சீர் ஏதாவது ஒன்றும் (ஒரே வகைக் காய்ச்சீராய் இருந்தால் சிறப்பு) சீர்கள் அமைதல் வேண்டும்.          

--பாவலர் மா.வரதராசன் ஆசானின் பாடவிதானம்__

                       ★★★

முதல்:மத்தாப்பாய் முடிவு:மகிழ்வோம்



மத்தாப்பாய்
மிளிர்கிறது வானெங்கும்
மனிதனாய்ப் பிறந்த
மாமனிதர் இறுதியூர்வலம்

போற்றுதற் குரியோர்
மனதில் மண்டியிருப்பதில்லை
பிறன்மீது பொறாமை வஞ்சகம்

நெஞ்சது அழுக்குண்டோர்
அடைவது ஆயிரமிருப்பினும்-இவர்
நல்லினம் என்றாவதில்லை

ஞானமாய் நட்புநாடு
கூடும் இடம்பார்த்தே
அளவிடும் சமூகம்
இன்னார் இவரென்று!

செய் தொழிலிலில்லை
குலங்கோத்திர பேதம்
வாய்மொழியில்தானே!

செம்மையான சிந்தனையும்
செயலும் வாழ்க்கையில்
நற்பெயர் சூழுச் சிறக்குமே!

நன்மக்கள் வாழ்த்திடில்
அழகுறும் நோக்கமும்
எதிர்கால சந்ததியுமே!

காரியம் வாகைசூடும்
வளமுள்ள உள்ளங்கள்
தாமுவந்து ஈனும்
கொடைதனிலே!

கொடுத்தே சிவந்தகைகள்
குறைவுகண்டு கைவிரித்து
வானம்பார்க்க ஏற்கார் தேவரீரே!

பஞ்சம் பட்டினிக்கு
குறைவில்லைப் பூவுலகில்
கையிருப்போர் கஞ்சராய்
மனது குறுகியிருக்க!

கஞ்சரிவர் உலகையே
ஆதாயங் கொண்டும்
வெறுங்கையே மூடுவர்
இறுதி ஊர்வலத்தில்!

பல்லாக்கு பகட்டுகளும் வெறுத்த
மனிதருள் மாணிக்கங்களை
வானவேடிக்கையோடு
கொண்டாடி மகிழ்வோம்.

~~~~~***~~~~~

வரிகள்: சிறி ஆரோன்



நிலவுக்குள் நீயடி


“காதலிக்கிறேன்” என்றாள்
“உள்ளேவா” என்று
உள்ளிருந்தே சொன்னேன்!

வெளியே வந்தொருநாள்
“நீ இப்போது சரியில்லை
என்னைக் கண்டுகொள்வதே
இல்லை!” என்றாள்!

என் கண்ணாய் நீயிருக்க
“கண்ணெப்படிக்
கண்ணைக் காணும்?”
என்றேன்.!

மறுமொழியாய்..
“கவிதைக் குதிரையில்
சவாரிசெய்ய காதலிக்குசுகம்
கணவாட்டிக்கு அல்லவே.!”

திருமணக்
களிப்புச் சடங்குதான்
காதலுக்கு இறுதிச் சடங்கோ?

“நிச்சயமாய் இல்லை!” என்று
புத்திசொன்னாலும் “அதுதான்
உண்மை!” என்றது அனுபவம்

“சுரிக்குளத்தில் கால்சிக்கிய 
முதலைபோல”
நெஞ்சமோ 
விடையறியாக்
கேள்வியோடு இழுபறியாய்.!

உண்மையான உண்மை
உண்மைக் காதலிலுள்ளான
உண்மைக்கு எப்பொழுதும்
உயிரிருக்கும்!

பிரியலாமென்று முடிவெடுக்கில்
மலையுச்சியில் நிறுத்தி - அது
மயிர்க்கூச்செறிய மீட்டும்.!

கூடியிருந்த நாட்களை..
மகிழ்ந்து சிரித்த நொடிகளை..
பதிந்துவைத்த சுவடுகளை..

உலகின் அதிசயமே
பலகோடிச் சனத்திலிருவர்
“உனக்குநான் எனக்குநீ”
என்னும் பந்தமல்லவா?

இல்லை கேட்கிறேன்..!!
ஒட்டாத சரீரங்கள் ஒன்றாய்ப்
பயணிக்க மரணத்தின் நாளை
நிர்ணயிப்பது சாத்தியமா.?

நிச்சயம் முடியும் - அது
காதலால் மாத்திரமே முடியுமென்று
காதலின் ஞாபகப் பக்கங்களால்
நிரூபணமே!

இருந்தும்..
அவளைக் காணவில்லை
தீர்க்கமாய்த் தேடியும் காணவில்லை
என்னெல்லைக்குள்.!

ஓய்ந்து நான்
உக்கார்ந்தேன்
வெள்ளிபூத்த ஓரிரவு
வானம் பார்த்து
புண்பட்டு நெஞ்சம்
புலம்பியபடி.!

அம்புலியில் அங்கோர்
வெள்ளை நிழல்.!!
அடக்கிராதகியே..!!
எங்கெல்லாம் தேடுக்கிறேன் - நீ
ஒளிந்திருப்பது நிலவின் முதுகிலா.!?

~~~~~~***~~~~~~

வரிகள்: சிறி ஆரோன்



முச்சீரிரட்டைச் சமனிலைச் சிந்து

பகிரன்பு தானே - இன்
நாளும் மனிதரிங்கு தங்க
இல்லாப் பிரிவினைகள் சூட - மாண்பு
இங்கே எதுவாக நீளும்?

வரிகள்: சிறி ஆரோன்

******************

அஞ்சி யடங்காத வாழ்வை - என்
      அன்னை எனக்கருள வேண்டும்
கொஞ்சு தமிழ்மறந்த போதே - கொடுங்
     கூற்றுக் கிரையாக வேண்டும்.
              - பாவலர் மா.வரதராசன்-

கருத்தூன்றுக :
மேற்கண்ட பாடல் வகை "முச்சீரிரட்டைச் சமனிலைச் சிந்து"ஆகும். 

அளவொத்த மும்மூன்று சீர்களைக் கொண்ட இரண்டடிகள் என்பது இதன்பொருள்.

அளவொத்த என்பதனால் முதலடியில் அமையும் விதத்திலேயே இரண்டாமடியிலும் சீர்கள் அமைய வேண்டும்.

இரண்டடிகளும் சமமான சீர்களைக் கொண்டிருந்தால் அது 'சமனிலைச் சிந்து' என்றும், சமமற்ற சீர்களைக் கொண்டிருந்தால் அது ' வியனிலைச் சிந்து' என்றும் குறிக்கப்படும். 

சான்று பாடல். . .
மா/காய்/மா   என்ற ஒழுங்கில் அமைந்த சமனிலைச் சிந்து ஆகும். (பயிற்சி ஒழுங்கிற்காக இதையே நீங்கள் எழுதவும்)

பாரதியாரின்
 ஓடி விளையாடு பாப்பா .. .
வெள்ளை நிறத்தொரு பூனை....
மலரின் மேவுந் திருவுடையாள் ...
போன்றன இவ்வகையே.

மிகமிக எளிதானது இந்தப் பாடல்வகை.

பொது இலக்கணம் :
********************
மேற்கண்ட பாடலின்படி...
* மூன்று சீர்களைக் கொண்ட இரண்டு அரையடிகளைக் கொண்டது ஓரடி.
* அஞ்சி ...என்பது முதல் வேண்டும்...என்பது வரை ஓரடி. 
கொஞ்சு... என்பது முதல், வேண்டும்...என்பது வரை மற்றோரடி.
* இரண்டடிக்கும் எதுகை அமைய வேண்டும். (அஞ்சி, கொஞ்சு) 
* 1- 4 ஆம் சீர்கள் அதாவது மடங்கிவரும் அரையடியில்  மோனையால் இணைந்து (அ,அ, - கொ, கூ)
* முதலிரு சீர்களும் வெண்டளை அமைய வேண்டும்.

- பாவலர் மா.வரதராசன்-
ஆசானின் பாடவிதானம்

கிளிக்கண்ணி

வாழ்வு கசந்தேகி 

     வாட்டுமே பெண்ணியத்தில்

தாழ்வுத் துயரமற - கிளியே 

      தாய்வரம் நீவாராய்!

                     வரிகள்: சிறி அருணன்

                 *****************

தெள்ளு தமிழ்மொழியைத் தீயவன் பேசினாலும்

உள்ளம் குழையுதடி - கிளியே

    உன்மத்தம் ஆகுதடி

              - பாவலர் மா.வரதராசன்-

கருத்தூன்றுக :

மேற்கண்ட பாடல் வகை "கிளிக்கண்ணி"ஆகும்.

மிகமிக எளிதான இந்தப் பாடல் வகையைப் பாரதிக்கு முன்பு அழுகுணிச்சித்தர் இயற்றியுள்ளார். அவருடைய பாடல் நான்கடிகளைக் கொண்டது.

"மூலப் பதியடியோ முன்னிரண்டு வாசலடி" என்ற பாடல்.

சான்று பாடலோ இரண்டடிகளைக் கொண்டது.

இந்த வகையை முதலில் காட்டியவர் பாரதியாகத்தான் இருக்க முடியும். பாரதியின்

"நெஞ்சில் உரமுமின்றி. . . என்ற பாடல் இந்த வகையே.

ஏட்டையா அம்பாசமுத்திரம் சுப்பராய சாமிகளின் மிகப் புகழ்பெற்ற

வள்ளிக் கணவன்பேரை.  . ..என்ற பாடலும் இந்த வகையே.

கிளிக்கண்ணி, நெஞ்சுக்கண்ணி, புலிக்கண்ணி, பாம்புக்கண்ணி போன்ற பலவகைகளில் இப்பாடல் அமையும்.

தனிச்சீரில் முன்னிலையாக அமையும் பாடுபொருளின் பெயராலேயே இவற்றுக்குப் பெயரமையும்.

கிளியை முன்னிறுத்தியதால் கிளிக்கண்ணியாயிற்று. இதேபோல், 

பாம்பை முன்னிறுத்தின் பாம்புக்கண்ணி எனப்படும். இதேபோல் மற்றவற்றிற்கும் கொள்க.


பொது இலக்கணம் :

********************

மேற்கண்ட பாடலின்படி...

* நான்கு சீர்களைக் கொண்ட இரண்டு அரையடிகளைக் கொண்டது ஓரடி.

* தெள்ளு...என்பது முதல் பேசினாலும்..என்பது வரை ஓரடி.

உள்ளம்... என்பது முதல், ஆகுதடி...என்பது வரை மற்றோரடி.

* இரண்டடிக்கும் எதுகை அமைய வேண்டும். (தெள்ளு, உள்ளம்)

* 1- 3 ஆம் சீர்கள்  மோனையமைய வேண்டும். (தெ- தீ, உ-உ)

* ஓரடியின் நான்கு சீர்களும் வெண்டளை அமைய வேண்டும்.

* இரண்டாமடி இரண்டிரண்டு சீர்களான அரையடிகளாக அமைந்தும்,

* அவ்வாறு மடங்குமிடத்தில் மோனையமைந்தும்,

* இரண்டாமடியின் மூன்றாவது சீராகக் #கிளியே என்னும் முன்னிலைத் தனிச்சீரும் அமைந்தும்,

* தனிச்சீருக்கும் முன்னும் பின்னும் வெண்டளை கட்டாயமில்லாமலும்.  . .ஆனால் தனிச்சொல்லை நீக்கிப் பார்ப்பின் நான்கு சீர்களும் வெண்டளையமைந்தும். . .

* தனிச்சீருக்கு முன்னுள்ள அரையடி வினைமுற்றாய் இருப்பதே பெரும்பான்மை. அதுவே சிறப்பான இசையைத் தரும். 

இந்த இலக்கணப்படி அமைவது "கிளிக்கண்ணி" எனப்படும்.

அடியின் தொடக்கம் தேமாச்சீராக அல்லது கூவிளச்சீராக  அமைந்தால் பாடும் சந்தம் சிறப்பாக அமையும்.

✍️பாவலர் மா.வரதராசன் அவர்களின் பாடவிதானம்

புதன், 11 டிசம்பர், 2024

வெண்கலிப்பா


காத்திடல் கொடுத்திடலாம் 
கடுஞ்சோர்வு நிதமுனக்கே
காத்திரு உறுமீன்தான் 
கையிழுக்கும் அதுவரையில்
காத்திரம் மிகுவிதைப்பே 
களஞ்சியத்தை நிரப்பிடுமாம்
காத்திடு கையிருப்பே கண் !
~~~~~~~~******~~~~~~~~
வரிகள்: சிறி அருணன்

கருத்தூன்றுக.:
*** *** *** ***
மேற்கண்ட பாடல் "வெண் கலிப்பா" ஆகும்.
வெண்பாவைப் போல் ஈற்றடி அமைவதாலும், வெண்டளை கொண்ட சீர்களாலும் அமையும் தன்மை நோக்கி இப்பெயர் வந்தது.

"வெண்கலிப்பா" வேறு..."கலிவெண்பா " வேறு.

கலித்தளையானும், வெண்டளை விரவியும், ஆசிரியத் தளை விரவியும் வருவது "வெண்கலிப்பா "

வெண்டளை மட்டுமே கொண்டு வருவது "கலிவெண்பா" ஆகும்.

இப் பாவகை அவ்வளவாக எழுதப்பெறுவதில்லை. நாம் எழுதிப் பரப்பலாம்.

மேற்கண்ட பாடல் தன் தளையானும் (கலித்தளை) , ஆசிரியத் தளையானும் அமைந்த வெண்கலிப்பா. (காய்முன் நிரை வருவது கலித்தளை.) 

வெண்டளை விரவி வருவதுமுண்டு. 
ஆனால் மாச்சீர்களும், நிரைநடுவஞ்சிச் சீரும் வாரா.

பொது இலக்கணம்.
*** *** *** ****** *** *** 
* நான்கு சீர்கள் கொண்டதாய்,
* நான்கு அடிகள் முதல் பல அடிகளைக் கொண்டதாய், (பயிற்சிக்கு நான்கடிகளே போதும்) 
* முதல் சீரும், மூன்றாம் சீரும் மோனையால் இணைந்து,
* இரண்டு அடிகளுக்கு ஒரு எதுகையைப் பெற்றும்,
* ஈற்றடி வெண்பாவைப் போல் முச்சீராய், 
* ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு இவற்றில் ஒன்றைக் கொண்டும்,
* கலித்தளை(தன் தளை)யானும், கலித்தளையுடன் வெண்டளை விரவியும், (பயிற்சிக்குக் கலித்தளையே கொள்க) 
வருவது "வெண் கலிப்பா" எனப்படும்.

இவ்வகையான ஒரு பாடலை வரும் வெள்ளிக்கிழமை நண்பகலுக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில்(comment) மட்டுமே எழுதி அனுப்புங்கள். 

-பாடத்தொகுப்பு: பாவலர் மா.வரதராசன் 

                                    ★★★

ஞாயிறு, 8 டிசம்பர், 2024

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்






யாவர்க்கும் முதுமை பொதுவே! 
~~~~~~~~******~~~~~~~~~~

பெற்றபிள்ளை கைவழுவாப் 
     பற்றும் அன்பே
பெறாப்பேறைப் பெற்றிட்டேன் 
     என்னும் தாய்மை
பெற்றகடன் வளர்த்தகடன் 
     என்றே பாராப்
பெருமையாய்த்தன் பிள்ளையினை 
      உயிராய்க் காணக்
கற்றறிந்து மேனிலையை 
     பெற்றேன் என்றே
கவுரவத்தில் கண்ணைமூடித் 
     தாயைத் தள்ள
வற்றவேபோம் சரீரத்தில் 
     இம்மாந் தர்தாம்
வருங்காலம் முதுமையென்று 
     நேர்தல் நன்றே!

~~~~~~~~***~~~~~~~~~
வரிகள்: சிறி அருணன்
~~~~~~~***~~~~~~~~~

பொது இலக்கணம்:

*அரையடிக்கு நான்கு சீர்கள் பெற்று, ஓரடிக்கு எட்டுச் சீர்கள் பெற்று,

*முதல் சீரும், ஐந்தாம் சீரும் மோனையால் இணைந்து, (பொழிப்பு மோனை 1 3 சீர்களில் அமைவதும் சிறப்பு. கருத்தின் முதன்மை வேண்டிப் பலரும் பார்ப்பதில்லை.)

* நான்கு சீர்களை அரையடியாகவும், அடுத்த நான்கு சீர்களை அடுத்த அரையடியாகவும் மடக்கி எழுதப் பெற்று,

* அடிதோறும் எதுகையைப் பெற்றும்,

* அரையடிக்குக் "காய், காய், மா, தேமா என்ற சீர் வரையறையைக் கொண்டும், நான்கடிகளைப் பெற்றும்,

* ஈற்றுச்சீர் ஏ, ஆ, ஆல், ஓ, வாழி என்பனவற்றுள் ஒன்றைக் கொண்டு முடிவது (ஏகாரம் சிறப்பு)

- தனிப்பாடலாயின் (முத்தகம்) ஏகாரமே சிறப்பு.

- தொடர்பாடலாயின் (குளகம்) எப்படியும் முடியலாம். இறுதிப் பாடலின் இறுதிச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு

"எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்." எனப்படும்.

காய்ச்சீரெனில் எக்காயும் வரலாம்.

மாச்சீர் எனில் தேமா, புளிமா எதுவும் வரலாம்.

ஆனால் அரையடியின் ஈற்றுச்சீரான நான்காம் சீரும், எட்டாம் சீரும் "தேமாச் சீராகவே வர வேண்டும்."

முதற்சீர் எக்காய்ச்சீரில் தொடங்குகிறதோ அதே காயில் அடுத்த அடியின் முதற்சீரும் தொடங்குதல் நன்று. ஓசை சிறக்கும். (இக்காலத்தில் யாரும் பார்ப்பதில்லை) ஆனால் நாம் அதைத் தொடரலாமே.
★★★

~~~~~~~***~~~~~~~~~

சனி, 7 டிசம்பர், 2024

தரவு கொச்சகக் கலிப்பா

நல்லாட்சி
~~~~~~~~~~~~~~~~~~~~


ஆசியாவில் நிறைவளத்தின் 
ஆச்சரிய ஈழமுத்து!
தேசியத்தில் பிரிவினையோர்
தேசப்பிதா முடிசூடியே.!
பாசிசர்தாம் தம்பெயரில்
பதுக்கியதை மீட்டிடவே!
சோசியலி சத்திருந்தே
சோரமிகாத் தலைவனின்று!

~~~~~~~***~~~~~~~~

வரிகள்: சிறி அருணன் 

பொது இலக்கணம்
*********************
★ நான்கடி கொண்டதாய்,
★ நான்கடிகளும் காய்ச்சீராய்
★ நான்கடிகளும் ஒரே எதுகையைக்
பெற்று, 
★ அடிதோறும் பொழிப்பு மோனை
பெற்று,
★முதற்சீரைத் தவிர மற்றசீர்கள் நிரையசையால் தொடங்குவதாய் (புளிமாங்காய்,கருவிளங்காய்)

வருவது "தரவு கொச்சகக் 
கலிப்பா " எனப்படும்.
*கோர்ப்பு: பாவலர் மா.வரதராசன்*

திங்கள், 25 நவம்பர், 2024

மாவீரர் மாண்பு




மேதகு எனுஞ்சொல்லே
மேல்மாண்பின் முகவரியாய்
உம்மால் ஆனதே!


மழலை முகத்தில்

பேரழகுச் சிரிப்பில்

கோபத்தையும் கண்ணியமாய்

அணுகும் மேதையே!


ஓரவிழிப் பார்வையில்

ஓராயிரங் கதைசொல்லும்

சாணக்கியர் கூட்டத்தின்

தலைஞானியே!


இருநாடியில் புன்னகையில் 

இறுகியமுகம் காட்டாத

சாந்தமுறையும் சற்குணன்

வழிமாவீரரே!


போரியல் சரிதங்கள்

போற்றும் தார்மீகர் 

எம்தாயகக் கரும்புலிகளே!


ஐம்படை கட்டியாண்ட

அசகாயசூரர் குலத்து

கரிகாலன் சாரையே!


வங்கக் கடல்கடைந்த 

வல்லவரிவரே கடலிலே 

காவியம் எழுதிட்டமகர்


உலகமே தூங்கிடிலாம்

இராக்காக்கும் வேங்கையருக்

கேதுகண்ணுறக்கம்?


நெஞ்சிலே 

நியாயம் கூரும் 

சாராமையில் நின்ற 

வேள்பாரிக் கூட்டத்தாரே!


வார்த்தையில் உறுதியும்

வழுவாமையும் கொண்ட 

கலியுகக் கரிகாலன் படையே!


கணிகர் நீதியால்

வல்லரசுகள் மெய்சிலிர்க்கச் 

செய்த பூசனினமே!


எதிரியாயினும் முதுகில்

குத்தாத சீராளன்

தலைமைகொள் மேனினமே!


துரோகிகட்கும்

துரோக மெண்ணானாத

கர்ணகுலத்தோரிவரே!


முடியாது இயலாது

எனுஞ் சொற்களை

இவர்களகராதி ஏற்றதில்லையே!


இப்பூமியிலென்ன தவம் 

செய்துவந்தோம் இத்தலைவன் 

மூச்சுக்காற்றை சுவாசிக்க..?


இன்னுமிவர் மாண்பும்

மேன்மக்கள் பண்பும்

கொண்டு வாழ்தல் - நாம்

இவர்கள் வழிகொண்டோர் 

என்றறியும் அகிலம்.

ஆசிரிய விருத்தம்

வேங்கையர்
(காய்-காய்-காய்-மா-தேமா)
~~~~~~~~~***~~~~~~~~~~


வேங்கையராய் மாவீரர் தம்தாய்மண் மீட்டிடவே 
       வேட்கை கொண்டே!

தாங்கொண்ணாத் துயர்களது தம்வாழ்வில் சகித்திருந்த
       தாளாத் தீரர்

ஓங்கதிகா ரச்சாட்டை ஏற்காத ஒப்பற்ற
       ஓங்கு கோனே!

தீங்குழலூ தும்மறையர் தமிழர்நாம் ஒப்பளிப்போம்
       தீங்கைத் தீயில்.

~~~~~~~***~~~~~~~
வரிகள்: சிறி ஆரோன்

புதன், 20 நவம்பர், 2024

கலி விருத்தம்

வாராயோ வெண்ணிலாவே 

(தீமே-புளிமா -புளிமா -புளிமா)

~~~~***~~~~

எந்தன் இரவின் தனிமை வழியே
வந்த அழகு நிலவே இனியும்
உந்தன் ஒளிவான் வெளிதன் விண்மீன்
பந்தம் அழைத்து வருவாய் அருகில்!

~~~~~***~~~~~

வரிகள்: சிறி ஆரோன்

சனி, 16 நவம்பர், 2024

நீலவானில்


நீலவானில் நிலவழகு
கருங்கூந்தல் அசைவழகு

புன்னகைக்கும் மென்புயல்
வெண்மாதுளை மணிகளாலே

கண்மூடிக் கற்பனையில்
காற்றில் நீந்துகிறாள்

விண்சாரல் வீதிதனில்
யாரிவள் என்கனவில்?

~~~~~~~~~~~~~~~~
வரிகள்: சிறி ஆரோன்

செவ்வாய், 12 நவம்பர், 2024

நேரிசை ஆசிரியப் பா


நல்லா ருளமோ நாளும் நினையும்
இல்லாத மாந்தருக் கீந்திடில் எந்தன்
வல்ல இறையோன் வாழ்த்துகாண்
எல்லா வளமுற நலமாய் வாழி

~~~~***~~~

வரிகள் சிறி ஆரோன்

பொது இலக்கணம்

**************************

✅நான்கு சீர்களைப் பெற்றுவரும்.

✅ஆசிரியவுரிச் சீர்களான மாச்சீர், விளச்சீர்களைப் பெற்றுவரும். சில காய்ச்சீர்களும் வரலாம். அவை மாங்காய்ச் சீராக மட்டுமே வரும். (பயிற்சியென்பதால் வாராதிருத்தல் சிறப்பு.)

✅மூன்றடி சிற்றெல்லையும், வரையறையில்லாப் பேரெல்லையும் உடையதாய், ஈற்றயலடி முச்சீராய், ஏனைய அடிகள் நாற்சீராய் வரும்.

✅இரண்டடிகளுக்கு ஓரெதுகையும்,

✅ஒவ்வோர் அடியிலும் பொழிப்பு

✅மோனையும் பெற்று வரும். (முதல் சீரிலும் மூன்றாம் சீரிலும் அமைவது பொழிப்பு மோனை எனப்படும்.)

✅ஈற்றடி ஏகாரத்தில் முடியும். ஓ, ஆ, ஆல் என்றும் வரலாம். ஏகாரமே சிறப்பு.

~~~~***~~~~

பைந்தமிழரசு பாவலர் மா. வரதராசன்

  (ஆசானால் தொகுக்கப்பட்டது)


வெள்ளி, 8 நவம்பர், 2024

நேரிசைப்பா வெண்பா

புயல் மழை

~~~***~~~

எங்கோ வுருவான உக்கிரசங் காரமது

தங்கித் தரியாப் புயலாய்-இங்கே

மண்குளிர மாமக்கள் அக்களித்தே ஆனந்தம்

விண்ணதிரக் கொட்டும் மழை! 

~~~~~~***~~~~~~

வரிகள்: சிறி ஆரோன்



புதன், 6 நவம்பர், 2024

பூநகரி மாடு கட்டிப் பூவரசங்குளம் ஏரு பூட்டி

சிற்றூர்க் கவிதை
~~~~~***~~~~~~

பூநகரி மாடு கட்டிப் 
பூவரசங்குளம் ஏரு பூட்டி உழவே/
புன்னைப் போடியார் வெளிக் கிட்டினார் 
பொழுதோடே சிறாம்பி இறங்கி//

சாலையில் சாடையான நிலவொளி
செவலைகள் பொடிநடை சோடிபோட்டு/
சொருகிய வெத்திலைப்பை இடுப்பிலாட
சீறும் சுருட்டுப்புகையோடு செருமலும்//

வெள்ளணப் புறப்பட்டே வயக்காடுவந்து
வரவைக்குள் நீரோடமண் வெட்டியடிச்சு/
விவசாயி படும் பாட்டில குளிருங் கூதலும்
வெக்கித் தலைகுனியும் வீரியமிழந்தே!//

பனையடி வெள்ளாமநிலம் பண்படுத்தி
பத்திரமா உரமெறிஞ்சு பாதுகாத்து/
பருவத்தில் நீரிறுத்துப் பதம்பாத்து
பக்குவமா களை பீடையும் பிடுங்கிடுவர்//

கொக்குங் குருவிகளும் கத்துங்கீதம்
கொள்ளவடிவு மயிலகவும் ஓசையும் இங்கே/
கொதிக்கும் வெயிலும் கூனிக் குறுகும் 
கோடை மாரியெண்டு பாராக் கோமகரால்//

இலாபநட்டக் கணக்கு இன்னதென்று அறியார்
ஈகைக்கு இலக்கணமே இவரல்லோ?/
இரத்தமும் வேர்வையும் இவருடம்பில்
சுரப்பது தேத்தண்ணியில இருந்தாமே!?//



~~~~~~~***~~~~~~~
கதைவடிவில்👇🏼

ஊர்க்கோழி கூவுமுன்னே
சிறாம்பி இறங்கி
காலைக் கடனிறுக்க 
ஆதாரம் அரிக்கேன் வெளிச்சம்

விடிஞ்சும் விடியாமல்
வெள்ளணப் பனிக்கூதலிலும் 
சுறுசுறுப்பாய்ச் சுழன்று
ஒத்தைத் தோள்ப்பட்டை மட்டும்
மூடித்தொங்கும் மேல்ச்சட்டை

காதிடுக்கில் பத்திரங்காத்த
குறைச்சுருட்டுக் கொளுத்தி
தெம்புக்கு ஒரு இழுப்பிழுது

முடிச்சு சொருகிய 
வெத்திலைப் பொட்டலம் 
இடுப்பில் இங்குமங்கும்
அசைவாட “அடடா.. பாவம்
தீர்ப்பெழுதாமலே அதுக்குத் தூக்கு!”

பூநகரி மாடு கட்டிப் 
பூவரசங்குளம் ஏரு பூட்டி 
வெளிக் கிட்டினார் பொழுதோட
புன்னைப் போடியார் 

இரட்டைச் செவலைகளும்
சைகை சொல்லும் வாயசைய
கழுத்துமணி அசைச்சி அசைச்சி.. 
வந்தாச்சி பனையடி வயல்க்காடு.!

“உச்சிவெயில் 
ஏறும் முன்னே
உழுது முடிச்சாகனும்
வச்சி வச்சிப் பிசைய நேரமில்ல”
உறுக்கி விரட்டியபடி “கோய் கோய்..”

தூரத்தில் மயிலகவும் 
கொக்கும் குருவிகளும் 
புழுநோண்டப் போக்கும் வரத்துமாய் 
சேத்தில பட்டும் படாம நடந்து
இரைகாவுதல் தனியழகு

மெல்லிய குளிர்காத்து 
முகத்திலுரசப் சில்லிடுமே!
இருந்தும்..
ஈரம்புதையும் கால்களுக்கு 
சேத்தில் லேசான சூடுகிட்டும் 
புதினமென்னவோ.?

அடுத்தவயல் அப்புக்குட்டி 
கூவிக் கதபேச..
கொடுப்புக்குள் சிரிச்சு
வெத்தில எச்சில் புளிச்சென
“சும்மா கிடப்பா உனக்குவேற வேலையில்ல..!”

ஓலைத்தொப்பி 
சூடேறி வியர்த்துக் கொட்ட
ஒருபாடாய் பழங்கஞ்சி 
ஞாபகம் பனைநிழ லொதுங்கிக் 
கொஞ்சம் இளைப்பாறி
இடைக்கிட தேத்தண்ணி!

மாலை படுமட்டும் 
பாடுபட்ட மாமனிசன்
வீடுபோகும் முன்ன
ஒருசுற்று கிறுக்கிப் பார்த்து..
“உலகச்சனம் பசியாற 
ஏவளவு பாடுடா சாமி” யெண்டு 
பொருமூச்சி விட்டுக் கிளம்பினார்
மனநிறைவோட.

~~~~~~***~~~~~~~
வரிகள்: சிறி ஆரோன்

சனி, 2 நவம்பர், 2024

நேரிசை வெண்பா


என்னவன் தோள்தனி
லென்தலை சாய்ந்திட
எத்தனை வல்லிய பாடுக ளோ
தென்னவன் அன்பினுள் 
அப்பழுக் குக்காணேன்
தீராஅன் பிற்குழை யுந்தன யன்

             பாடல்: சிறி ஆரோன்

              ( நேரிசை வெண்பா)

புன்னை நறுமலரின் பூந்தா திடையுறங்கும்

கன்னி இளமேதிக் காற்குழம்பு - பொன்னுரைத்த

கல்லேய்க்கும் நாடன் கவறாடப் போயினான்

கொல்லேற்றின் மேலேறிக் கொண்டு.

                         - நளவெண்பா

🔲வெண்பாவின் வகைகள்.,

குறள் வெண்பா.(ஈரடிகளால் அமையும்) 

சிந்தியல் வெண்பா.(மூவடிகளால் அமையும்) 

இன்னிசை வெண்பா.(நான்கடிகளால் அமையும்) 

நேரிசை வெண்பா.(நான்கடிளால் அமையும்) 

பஃறொடை வெண்பா (ஐந்தடி தொடங்கிப் பன்னிரண்டு அடிவரை அமையும்) 

கலிவெண்பா.(பன்னிரண்டு அடிகள் தொடங்கி அளவில்லாமல்))

🔲பொது இலக்கணம்.

****-*******************

🔷 நான்கடிகளைப் பெற்று,

🔷மூன்றடிகள்  நான்கு சீர்களும். ஈற்றடி மூன்று சீர்களும் பெற்று,

🔷 ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஓரசைச் சீராய், நாள், மலர், காசு, பிறப்பு எனும் வாய்பாடுகளுள் ஒன்றினைக் கொண்டு முடிந்தும், ( சான்று பாடலில் கொண்டு எனும் சொல்லில் முடிந்த ஈற்றுச்சீர்  "காசு" எனும் வாய்பாட்டில் முடிந்தமை காண்க) 

🔷ஒன்று, மூன்றாம் சீர்களில் மோனையும், (சான்று பாடலில், பு--பூ   க-- கா, க--க,   கொ -- கொ  )

🔷இரண்டடிகளுக்கு ஒரு எதுகையும் (நான்கடிகளும் ஓரெதுகை பெற்றும் வரலாம்) 

புன்னை - கன்னி - பொன்னுரைத்த,

கல்லேய்க்கும் - கொல்லேற்றின்

🔷இரண்டாம் அடியின் நான்காம் சீர் "தனிச்சீர்" எனப்படும். அந்தச் சீருக்கும் மூன்றாம் சீருக்கும் இடையே ஒரு சிறு கோடிருக்கும். தனிச்சீர் முதலிரண்டு அடிகளின் எதுகையைப் பெற்றிருத்தல் ★கட்டாயம்.( சான்று பாடலில்.... பொன்னுரைத்த)  

எதுகையில்லாத் தனிச்சீரும் சிறுகோடும் இல்லையேல் அஃது "இன்னிசை வெண்பா" எனப்படும்

★வெண்டளை மட்டுமே பயின்று வரக்கூடிய சீர்களைப் பெற்று

    வருவது "நேரிசை வெண்பா "ஆகும்.

++++++++++++++++++++++++++++++

🔶வெண்டளைக்கான சூத்திரம் : 

காய்முன்நேர், விளம்முன்நேர், மாமுன்நிரை

++++++++++++++++++++++++++++++

     இந்த மூன்று வகையான தளைகளைக் கொண்ட சீர்களேயன்றி வேறெந்தச் சீர்களும் வெண்பா வகைப் பாடல்களுக்கு வருதல் கூடாது. இந்தச் சூத்திரம் அனைத்து வெண்பா வகைகளுக்கும் பொதுவானதாகையால் நன்கு நினைவில் நிறுத்தவும்.

1. காய்ச்சீருக்கு அடுத்து நேரசையில் தொடங்குவது "காய்முன்நேர் "

2. விளச்சீருக்கு அடுத்து நேரசையில் தொடங்குவது "விளம்முன்நேர் "

3. மாச்சீருக்கு அடுத்து நிரையசையில் தொடங்குவது "மாமுன்நிரை "

இவ்வகையான நேரிசை வெண்பா ஒன்றை வரும் வெள்ளிக்கிழமைக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில் மட்டும்  எழுதியனுப்புங்கள்.

நன்றி...

ஆசான்: பைந்தமிழரசு பாவலர் மா வரதராசன்

கும்மிப்பாடல்

தோள்தனி லென்தலை சாய்ந்திட

     எத்தனை வல்லிய பாடுக ளோ 

தென்னவன் அன்பினுள் அப்பழுக் குக்காணேன்

     தீராஅன் பிற்குழை யுந்தன யன்

-பாடல்: சிறி ஆரோன்-

~~~***~~~

மேற்கண்ட பாடலில்,

🔷ஒவ்வொரு சீரிலும் மூன்று எழுத்துகள் (ஒற்று நீக்கி) உள்ளன.( க ண ணி ) ( மா ய கு ) ( று பு க) ( ளை க டா) ( க க டா ) (ந மு ள ) ( தி தி கு ) 

🔷8 ஆம்சீர்கள் ஓரெழுத்தே இருந்தாலும் (மே**) (மே**இரண்டு எழுத்துக்குப் பதில் அந்த இடத்தில் நீண்டு இசைக்கும் (நீட்டிப் பாட வேண்டும்) . நீண்டிசைக்கும் எழுத்து *குறியிட்டுள்ளதைக் காண்க. (பாடலை எழுதும் போது குறியிடத் தேவையில்லை. புரிவதற்காகப் போட்டுள்ளேன்.)

🔷நான்காவது சீர் சிறுகோடிட்டுத் தனிச்சொல் பெற்று வருவதுமுண்டு. அதை மூன்றாம் சீருடன் இணைத்துப் பாடுமாறு அமைதல் வேண்டும். (செந்தமிழ் நாடெனும் போதினி லே - இன்பத்,

🔷இதில் இன்பத் எனும் தனிச்சீரை லே எனும் மூன்றாம் சீருடன் சேர்த்துப் பாடுமாறு அமைந்ததைக் காண்க)

🔷இருகுறில் இணைந்த சீரால் அடி தொடங்குதல் முன்னோர் பாடல்களில் உண்டு. ஆயினும் அது சிறப்பில்லாதது. நாம் நெடில், நெடிலொற்று, குறிலொற்று இப்படியான சீர்களைக் கொண்டே முயலலாம்.

🔲பொது இலக்கணம் :

மேற்கண்ட பாடலின்படி...

🔶ஓரடிக்கு மூன்றெழுத்துச் சீர்கள் எட்டு வரவேண்டும்.

🔶 இரண்டடிகளும் எதுகையால் இணைந்து ( கண்ண, வண்ண )

🔶 முதற்சீரும் ஐந்தாம் சீரும் மோனையால் இணைந்து ( க , க) (வ, வா)

🔶அடிகளின் எட்டாம் சீர் ஓரெழுத்தே கொண்டு( மே ) (மே)

வகைபடுதல்: ஆசான் பைந்தமிழரசு பாவலர் மா.வரதராசன்

முதல்: மத்தாப்பாய் | முடிவு: மகிழ்வோம்


மத்தாப்பாய் ஒளிர்ந்து

வானமெல்லாம் 

வண்ண வேடிக்கை 

மனதுக்கு நிறைவாய்


நிறைவான மனிதர்

நெஞ்சத்தே 

ஒளிந்திருப்பதில்லை 

பிறன் வீழ்த்தும் வஞ்சகம்


வஞ்சகர் அவர்தாம்

வாழ்க்கையில் எல்லைவரை

முயன்றாலும் நல்லிடம் 

சேர்வதேது?


சேருவர் இடம்பார்த்தே

உன்னை என்னை 

அளவிடும் இச்சமூகம்

இன்னாரென்று.!


இன்னாரென்று 

குலங்காண பிறப்பில்ல 

அளவீடு கொண்டுணர்தல்-நம்

வாய்மொழி வார்த்தைதானே!


வார்த்தைகள் 

செம்மைப்படின்

வாழ்க்கை மேல்ச்சிறந்து

நற்பெயர் நாளும் சூழுமே!


சூழும் நன்மக்கள்

எண்ணுதலும் வாழ்த்துதலும்

அழகுறச் செய்திடும்

நாம் நோக்கும் காரியந்தனை


காரியம் சகலதும் வாகைசூடும்

வளமுள்ள உள்ளங்கள்

தாமுவந்து ஈனும்

கொடைதனிலே!


கொடைதனை

பூமிபார்க்கக் கொடுத்துச்

சிவந்த கைகளுக்கு

சீவியத்தில் குறைவில்லை


குறைவில்லை 

பஞ்சம் பட்டினிக்கும்

பூவுலகில் கையிருப்போர்

மனது குறுகிக் கஞ்சராயிருக்க


கஞ்சரிவர் உலகையே 

ஆதாயங் கொண்டும்

வெறுங்கையே மூடுவர்

இறுதி ஊர்வலத்தில்!


ஊர்வலப் பல்லாக்குகளும்

சுயமும் வெறுத்து 

மனிதருள் மாணிக்கமானோரை

உளஞ்சுமந்தே மகிழ்வோம்.

~~~~~***~~~~~

வரிகள்: சிறி ஆரோன்

வெள்ளி, 25 அக்டோபர், 2024

ஞாயிறு, 20 அக்டோபர், 2024

பெருவாழ்வு



கண்பேசும் உறவுகள் 

அழகுதான் முதுமையிலும்


தோளில் சாய்ந்து 

ஆறுதலாய் அன்புபகிரவும்


கைபிடித்து கவலை 

மறக்கக் கதைபேசவும்


இறுதிவரை இணைபிரியாப்  

பேரின்பமே பெருவாழ்வு


~~~~~***~~~~

வரிகள்: சிறி ஆரோன்

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...