எத்தனை வல்லிய பாடுக ளோ
தென்னவன் அன்பினுள்
தீராஅன் பிற்குழை யுந்தன யன்
பாடல்: சிறி ஆரோன்
( நேரிசை வெண்பா)
புன்னை நறுமலரின் பூந்தா திடையுறங்கும்
கன்னி இளமேதிக் காற்குழம்பு - பொன்னுரைத்த
கல்லேய்க்கும் நாடன் கவறாடப் போயினான்
கொல்லேற்றின் மேலேறிக் கொண்டு.
- நளவெண்பா
🔲வெண்பாவின் வகைகள்.,
குறள் வெண்பா.(ஈரடிகளால் அமையும்)
சிந்தியல் வெண்பா.(மூவடிகளால் அமையும்)
இன்னிசை வெண்பா.(நான்கடிகளால் அமையும்)
நேரிசை வெண்பா.(நான்கடிளால் அமையும்)
பஃறொடை வெண்பா (ஐந்தடி தொடங்கிப் பன்னிரண்டு அடிவரை அமையும்)
கலிவெண்பா.(பன்னிரண்டு அடிகள் தொடங்கி அளவில்லாமல்))
🔲பொது இலக்கணம்.
****-*******************
🔷 நான்கடிகளைப் பெற்று,
🔷மூன்றடிகள் நான்கு சீர்களும். ஈற்றடி மூன்று சீர்களும் பெற்று,
🔷 ஈற்றடியின் ஈற்றுச்சீர் ஓரசைச் சீராய், நாள், மலர், காசு, பிறப்பு எனும் வாய்பாடுகளுள் ஒன்றினைக் கொண்டு முடிந்தும், ( சான்று பாடலில் கொண்டு எனும் சொல்லில் முடிந்த ஈற்றுச்சீர் "காசு" எனும் வாய்பாட்டில் முடிந்தமை காண்க)
🔷ஒன்று, மூன்றாம் சீர்களில் மோனையும், (சான்று பாடலில், பு--பூ க-- கா, க--க, கொ -- கொ )
🔷இரண்டடிகளுக்கு ஒரு எதுகையும் (நான்கடிகளும் ஓரெதுகை பெற்றும் வரலாம்)
புன்னை - கன்னி - பொன்னுரைத்த,
கல்லேய்க்கும் - கொல்லேற்றின்
🔷இரண்டாம் அடியின் நான்காம் சீர் "தனிச்சீர்" எனப்படும். அந்தச் சீருக்கும் மூன்றாம் சீருக்கும் இடையே ஒரு சிறு கோடிருக்கும். தனிச்சீர் முதலிரண்டு அடிகளின் எதுகையைப் பெற்றிருத்தல் ★கட்டாயம்.( சான்று பாடலில்.... பொன்னுரைத்த)
எதுகையில்லாத் தனிச்சீரும் சிறுகோடும் இல்லையேல் அஃது "இன்னிசை வெண்பா" எனப்படும்
★வெண்டளை மட்டுமே பயின்று வரக்கூடிய சீர்களைப் பெற்று
வருவது "நேரிசை வெண்பா "ஆகும்.
++++++++++++++++++++++++++++++
🔶வெண்டளைக்கான சூத்திரம் :
காய்முன்நேர், விளம்முன்நேர், மாமுன்நிரை
++++++++++++++++++++++++++++++
இந்த மூன்று வகையான தளைகளைக் கொண்ட சீர்களேயன்றி வேறெந்தச் சீர்களும் வெண்பா வகைப் பாடல்களுக்கு வருதல் கூடாது. இந்தச் சூத்திரம் அனைத்து வெண்பா வகைகளுக்கும் பொதுவானதாகையால் நன்கு நினைவில் நிறுத்தவும்.
1. காய்ச்சீருக்கு அடுத்து நேரசையில் தொடங்குவது "காய்முன்நேர் "
2. விளச்சீருக்கு அடுத்து நேரசையில் தொடங்குவது "விளம்முன்நேர் "
3. மாச்சீருக்கு அடுத்து நிரையசையில் தொடங்குவது "மாமுன்நிரை "
இவ்வகையான நேரிசை வெண்பா ஒன்றை வரும் வெள்ளிக்கிழமைக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில் மட்டும் எழுதியனுப்புங்கள்.
நன்றி...
ஆசான்: பைந்தமிழரசு பாவலர் மா வரதராசன்