புதன், 11 டிசம்பர், 2024

வெண்கலிப்பா


காத்திடல் கொடுத்திடலாம் 
கடுஞ்சோர்வு நிதமுனக்கே
காத்திரு உறுமீன்தான் 
கையிழுக்கும் அதுவரையில்
காத்திரம் மிகுவிதைப்பே 
களஞ்சியத்தை நிரப்பிடுமாம்
காத்திடு கையிருப்பே கண் !
~~~~~~~~******~~~~~~~~
வரிகள்: சிறி அருணன்

கருத்தூன்றுக.:
*** *** *** ***
மேற்கண்ட பாடல் "வெண் கலிப்பா" ஆகும்.
வெண்பாவைப் போல் ஈற்றடி அமைவதாலும், வெண்டளை கொண்ட சீர்களாலும் அமையும் தன்மை நோக்கி இப்பெயர் வந்தது.

"வெண்கலிப்பா" வேறு..."கலிவெண்பா " வேறு.

கலித்தளையானும், வெண்டளை விரவியும், ஆசிரியத் தளை விரவியும் வருவது "வெண்கலிப்பா "

வெண்டளை மட்டுமே கொண்டு வருவது "கலிவெண்பா" ஆகும்.

இப் பாவகை அவ்வளவாக எழுதப்பெறுவதில்லை. நாம் எழுதிப் பரப்பலாம்.

மேற்கண்ட பாடல் தன் தளையானும் (கலித்தளை) , ஆசிரியத் தளையானும் அமைந்த வெண்கலிப்பா. (காய்முன் நிரை வருவது கலித்தளை.) 

வெண்டளை விரவி வருவதுமுண்டு. 
ஆனால் மாச்சீர்களும், நிரைநடுவஞ்சிச் சீரும் வாரா.

பொது இலக்கணம்.
*** *** *** ****** *** *** 
* நான்கு சீர்கள் கொண்டதாய்,
* நான்கு அடிகள் முதல் பல அடிகளைக் கொண்டதாய், (பயிற்சிக்கு நான்கடிகளே போதும்) 
* முதல் சீரும், மூன்றாம் சீரும் மோனையால் இணைந்து,
* இரண்டு அடிகளுக்கு ஒரு எதுகையைப் பெற்றும்,
* ஈற்றடி வெண்பாவைப் போல் முச்சீராய், 
* ஈற்றுச்சீர் நாள், மலர், காசு, பிறப்பு இவற்றில் ஒன்றைக் கொண்டும்,
* கலித்தளை(தன் தளை)யானும், கலித்தளையுடன் வெண்டளை விரவியும், (பயிற்சிக்குக் கலித்தளையே கொள்க) 
வருவது "வெண் கலிப்பா" எனப்படும்.

இவ்வகையான ஒரு பாடலை வரும் வெள்ளிக்கிழமை நண்பகலுக்குள் இப்பதிவின் கருத்துப் பகுதியில்(comment) மட்டுமே எழுதி அனுப்புங்கள். 

-பாடத்தொகுப்பு: பாவலர் மா.வரதராசன் 

                                    ★★★

ஞாயிறு, 8 டிசம்பர், 2024

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்






யாவர்க்கும் முதுமை பொதுவே! 
~~~~~~~~******~~~~~~~~~~

பெற்றபிள்ளை கைவழுவாப் 
     பற்றும் அன்பே
பெறாப்பேறைப் பெற்றிட்டேன் 
     என்னும் தாய்மை
பெற்றகடன் வளர்த்தகடன் 
     என்றே பாராப்
பெருமையாய்த்தன் பிள்ளையினை 
      உயிராய்க் காணக்
கற்றறிந்து மேனிலையை 
     பெற்றேன் என்றே
கவுரவத்தில் கண்ணைமூடித் 
     தாயைத் தள்ள
வற்றவேபோம் சரீரத்தில் 
     இம்மாந் தர்தாம்
வருங்காலம் முதுமையென்று 
     நேர்தல் நன்றே!

~~~~~~~~***~~~~~~~~~
வரிகள்: சிறி அருணன்
~~~~~~~***~~~~~~~~~

பொது இலக்கணம்:

*அரையடிக்கு நான்கு சீர்கள் பெற்று, ஓரடிக்கு எட்டுச் சீர்கள் பெற்று,

*முதல் சீரும், ஐந்தாம் சீரும் மோனையால் இணைந்து, (பொழிப்பு மோனை 1 3 சீர்களில் அமைவதும் சிறப்பு. கருத்தின் முதன்மை வேண்டிப் பலரும் பார்ப்பதில்லை.)

* நான்கு சீர்களை அரையடியாகவும், அடுத்த நான்கு சீர்களை அடுத்த அரையடியாகவும் மடக்கி எழுதப் பெற்று,

* அடிதோறும் எதுகையைப் பெற்றும்,

* அரையடிக்குக் "காய், காய், மா, தேமா என்ற சீர் வரையறையைக் கொண்டும், நான்கடிகளைப் பெற்றும்,

* ஈற்றுச்சீர் ஏ, ஆ, ஆல், ஓ, வாழி என்பனவற்றுள் ஒன்றைக் கொண்டு முடிவது (ஏகாரம் சிறப்பு)

- தனிப்பாடலாயின் (முத்தகம்) ஏகாரமே சிறப்பு.

- தொடர்பாடலாயின் (குளகம்) எப்படியும் முடியலாம். இறுதிப் பாடலின் இறுதிச்சீர் ஏகாரத்தில் முடிவது சிறப்பு

"எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்." எனப்படும்.

காய்ச்சீரெனில் எக்காயும் வரலாம்.

மாச்சீர் எனில் தேமா, புளிமா எதுவும் வரலாம்.

ஆனால் அரையடியின் ஈற்றுச்சீரான நான்காம் சீரும், எட்டாம் சீரும் "தேமாச் சீராகவே வர வேண்டும்."

முதற்சீர் எக்காய்ச்சீரில் தொடங்குகிறதோ அதே காயில் அடுத்த அடியின் முதற்சீரும் தொடங்குதல் நன்று. ஓசை சிறக்கும். (இக்காலத்தில் யாரும் பார்ப்பதில்லை) ஆனால் நாம் அதைத் தொடரலாமே.
★★★

~~~~~~~***~~~~~~~~~

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...