வா என் கண்ணே..
எங்கள் முழுமுதற் கருவூலமாய் - நீ
இப்பிறப்பில் பெற்றேகிய பேரானந்தமும் - நீ
அது உள்ளாராத் தழுவிய அன்றே 06-ஜூலை-2022
தங்கத் தமிழுக்கு ஆனி 22_டுமாம்;
*
வா என் கண்ணே..
உன் குயவர் நாம்
உன்னோடு கண்ணுறங்கா
இராத்திரிகள் அத்தனையும்
கண்மணியுனை காக்கத்தானே
கவுரவமாய் விடிகிறது;
*
வா என் கண்ணே..
உன் மழலைப் புன்னகையில்
என்னிதயச் சுவர்களில்
மலர்கிறது பலகோடிப் பாரிஜாதம்;
*
வா என் கண்ணே..
உன் விரல்கள்
காற்றில் மீட்டும் வீணையின் நாண்கள்
என் காதுகளில் அத்தனையும்
சப்தஸ்வரங்களாய் பேச;
*
வா என் கண்ணே..
உன் பிஞ்சுக்கால்கள்
விண்ணை நோக்கி உந்தும் - அது
நீ வானிலும் நடக்க பயில்கிறாயென்று
பூரிக்கிறேன் குமரா;
*
வா என் கண்ணே..
நீ அழுகையிலும்,
குழைந்து தவிக்கையிலும்,
தந்தையென் இன்னிதயத்தில்
உலகயுத்தத்தின் பேரவலம்
மையங்கொள்கிறது மைந்தனே;
*
வா என் கண்ணே..
என்னை நானே செதுக்கிச்..
செதுக்கிச் சிலையானேன்
உன்னைச் செதுக்கவே நானின்று
மலையானேன் உன்முன்னே - நீ
கலங்காதே கண்ணே வா..
வரிகள் ஸ்ரீ ஆரோன்
***