சனி, 12 அக்டோபர், 2024

படத்துக்கு கவிதை

தங்கத்தால் 

ஆடைநெய்து

உலாவும் உவகையே


தொங்கட்டான் 

அணிந்தவுனக்கு செஞ்சரிகை 

புதுமைதான்


கண்களில் ஏக்கத்தோடு

முகநாடி 

சோர்வதேனோ?


கூந்தல் 

சூடிடப்பறித்த 

மாமலரோடு தர்க்கந்தானே?


~~~~

வரிகள்: சிறி ஆரோன்



வெள்ளி, 11 அக்டோபர், 2024

வியாழன், 10 அக்டோபர், 2024

படத்துக்கு கவிதை



காதறுந்த செருப்பின்
சோடியக் காணயில்ல

என்னசையும் சொத்தான 
பழக்கூடையும் மெலிவதாயில்ல

வயித்துப் பசியாத்த
வக்கத்துக் குந்தியிருந்தேன்

இப்படமெடுத்த பெடியனுக்கு
பரிசாம் அருமையென்று!

~~~~~~~~~~~~~~~

வரிகள்: சிறி ஆரோன்

செவ்வாய், 8 அக்டோபர், 2024

தோல்வியில் துவளாமல் துணிந்து நில்..



முழங்கால்கள் வலிக்கும் நடை நிறுத்தாதே!

நெஞ்சம் படபடக்கும் நோக்கில் விலகாதே!

கண்கள் இருண்டு கலங்கிடும் இமைமூடாதே!

தேகமிதுதான் சோர்வுறும் இட்சிய தாகமல்ல.

*


உன்னில் குறைகண்டு இவ்வுலகம் புறம்பேதள்ளும்

இலக்கை மெருகேற்றி நோக்கில் குறியாயிரு

வியர்வை அதுவொன்றுதான் விலைகணிக்கப்படாத செல்வம்

சகலசம்பிரதாயங்களும் உன்கால்கட்டும் வலுகவனம் சிக்கிடாதே!

*


பின்புறமிருந்து தடுக்கிவிட புன்னகைமுகங்கள் பலவுண்டு

தோல்வியில் துவளாமல் துணிந்து நில்

வெற்றிச் சுவையது வலியவனுக்கு மட்டுமன்றே!

விடாமுயற்சியோடு ஓடும் தோல்வியின் தோழனுக்குமே!

***

வரிகள்: சிறி ஆரோன்

இருகோடுகள்

இவ்விருகோடுகள்

பற்றிச் செல்லும் ஏழைகளின்

விரைவுச் சொகுசுப்பயணம்

*

ஓராயிரம் 

கதைகள் சுமந்து 

நெடுந்தூரம் நீடிய கூச்சலிட்டு

*

ஒட்டி உறவாடாமலும்

வெற்றிகாணும் இருவேறு 

தடங்களின் இரகசியம் இதுவே

***


வரிகள்: சிறி ஆரோன்

மட்டூர், ஈழதேசம்

ஞாயிறு, 6 அக்டோபர், 2024

“என்னில் பாதி நீ..”

காதல் கவிதைப் போட்டி-7

~~~~~~~~~~~~~
பார்த்த நொடியே 
கால்மேல் கால் போட்டு
என் நெஞ்சுக் கூட்டில் நீயமர்ந்தாயடி
அன்பெனும் கயிற்றால்
கட்டியென்னை 
இறுகப்பற்றி இழுத்தாயே
ஏமாற்றங்கள் கண்டு 
வறண்ட என் வாழ்வில் 
மழையாய் பொழிந்தவளே
அகண்ட இரவுகளில் 
வாழ்ந்தவன் எனக்கு
மின்மினியுன் சிற்றொளி
போதும் கண்ணே
என் ஆறாக் கவலைகள்
மறக்கவும் தேறவும்
உன் மடிதாங்கு போதுமம்மா
என் ஆனந்தக் கண்ணீரையும்
தாங்கிட ஒப்பாத உன்னன்பை
என்னவென்று சொல்ல?
நேர்மைக்கு நேராய்
நேர்த்தியாக வழிநடத்தும் 
என் திசைகாட்டியே நீதானடி
என் நியாயமற்ற 
கோபங்களை அடக்கும்
காதல் அங்குசமாய் 
நீயொருவள் மாத்திரமே
நான் காணும் 
உயரங்கள் அத்தனையும்
உன் ஆலோசனையின்
அறுவடை என்றாலும் தகுமே!
வெற்றுப் பண்டம் என்னில் 
அறுசுவையோடு கூடிய
அருமருந்தாய் ஆனவளே
என் கனவுகள்
உயிர் கொண்டால்
உன்னுருவில்தான் 
நடமாடுமோ?
என் தலைமுறை நீடிக்க
என்னில் கருவெடுத்து 
உருகோர்த்த தாயுமானவளே
தலைக்கன ஆடவனிவன்
வாழ்விலக்கணம் நிம்மதி
என்றானது உன்னாலே
கல்வியும் உழைப்பும்
கண்ணிரெண்டாய்
உணர்த்திய ஒளிவிளக்கே!
செஞ்சுடரைப் பற்றிய 
பூமியாய் சுழலுகிறேன்
ஒருக்கணித்தே உன்னில்
என்னில் பாதி 
நீயில்லையடி.! 
நீக்கமற வியாபித்திருக்கும்
முற்றில்லா முழுமையே.
~~~
கவிவரிகள்: சிறி அருணன்




பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...