வியாழன், 19 டிசம்பர், 2024

வஞ்சி விருத்தம்


மண்ணே உன்னில் மாண்டுளன்று
விண்ணே போன வீரமிகோர்
கண்ணே தமிழென் காத்திடவே
அண்ணே என்று ஆர்பரித்தோம்!


~~~~~~*****~~~~~

பாடல்: சிறி அருணன்

                       ********************

ஈடாய் எதுவு மில்லாத

ஏடா யிரங்கள் எழிலூட்டும்

தேடாச் செல்வச் செந்தமிழை

நாடா தோரே நலிவாரே!

                           --பாவலர் மா.வரதராசன்

கருத்தூன்றுக.:

மேற்கண்ட பாடல் "வஞ்சி விருத்தம்" ஆகும். 

மிகவும் எளிதான இவ்விருத்தம் சிந்தடிகளால் (முச்சீர் அடிகளால்) அமையும்.

அளவொத்த சிந்தடிகள் என்பதே குறிப்பு. எனவே இன்ன சீர்கள்தாம் வர வேண்டும் என்ற வரைறையில்லை. எந்த வித அமைப்பிலும் அமைத்து எழுதலாம்.

நாம் பயிற்சிக்கு,

தேமா, மா, காய் என்ற அமைப்பை மட்டும் எழுதலாம்.

பொது இலக்கணம்.

*அளவொத்த மூன்று சீர்கள் கொண்டதாய்,

*நான்கு அடிகள் பெற்று,

* நான்டிகளும் ஒரே எதுகையைப் பெற்றும்,

* முடிந்தால் பொழிப்பு மோனை பெற்று (கட்டாயமில்லை) (சான்று பாடலில் வந்துள்ளதைப் பார்க்க) 

வருவது "வஞ்சி விருத்தம் " ஆகும்.

ஓரடிக்கு, முதற்சீர் தேமாவாகவும், இரண்டாம் சீர் தேமா, புளிமா இவற்றில் ஒன்றும், மூன்றாம் சீர் காய்ச்சீர் ஏதாவது ஒன்றும் (ஒரே வகைக் காய்ச்சீராய் இருந்தால் சிறப்பு) சீர்கள் அமைதல் வேண்டும்.          

--பாவலர் மா.வரதராசன் ஆசானின் பாடவிதானம்__

                       ★★★

முதல்:மத்தாப்பாய் முடிவு:மகிழ்வோம்



மத்தாப்பாய்
மிளிர்கிறது வானெங்கும்
மனிதனாய்ப் பிறந்த
மாமனிதர் இறுதியூர்வலம்

போற்றுதற் குரியோர்
மனதில் மண்டியிருப்பதில்லை
பிறன்மீது பொறாமை வஞ்சகம்

நெஞ்சது அழுக்குண்டோர்
அடைவது ஆயிரமிருப்பினும்-இவர்
நல்லினம் என்றாவதில்லை

ஞானமாய் நட்புநாடு
கூடும் இடம்பார்த்தே
அளவிடும் சமூகம்
இன்னார் இவரென்று!

செய் தொழிலிலில்லை
குலங்கோத்திர பேதம்
வாய்மொழியில்தானே!

செம்மையான சிந்தனையும்
செயலும் வாழ்க்கையில்
நற்பெயர் சூழுச் சிறக்குமே!

நன்மக்கள் வாழ்த்திடில்
அழகுறும் நோக்கமும்
எதிர்கால சந்ததியுமே!

காரியம் வாகைசூடும்
வளமுள்ள உள்ளங்கள்
தாமுவந்து ஈனும்
கொடைதனிலே!

கொடுத்தே சிவந்தகைகள்
குறைவுகண்டு கைவிரித்து
வானம்பார்க்க ஏற்கார் தேவரீரே!

பஞ்சம் பட்டினிக்கு
குறைவில்லைப் பூவுலகில்
கையிருப்போர் கஞ்சராய்
மனது குறுகியிருக்க!

கஞ்சரிவர் உலகையே
ஆதாயங் கொண்டும்
வெறுங்கையே மூடுவர்
இறுதி ஊர்வலத்தில்!

பல்லாக்கு பகட்டுகளும் வெறுத்த
மனிதருள் மாணிக்கங்களை
வானவேடிக்கையோடு
கொண்டாடி மகிழ்வோம்.

~~~~~***~~~~~

வரிகள்: சிறி ஆரோன்



நிலவுக்குள் நீயடி


“காதலிக்கிறேன்” என்றாள்
“உள்ளேவா” என்று
உள்ளிருந்தே சொன்னேன்!

வெளியே வந்தொருநாள்
“நீ இப்போது சரியில்லை
என்னைக் கண்டுகொள்வதே
இல்லை!” என்றாள்!

என் கண்ணாய் நீயிருக்க
“கண்ணெப்படிக்
கண்ணைக் காணும்?”
என்றேன்.!

மறுமொழியாய்..
“கவிதைக் குதிரையில்
சவாரிசெய்ய காதலிக்குசுகம்
கணவாட்டிக்கு அல்லவே.!”

திருமணக்
களிப்புச் சடங்குதான்
காதலுக்கு இறுதிச் சடங்கோ?

“நிச்சயமாய் இல்லை!” என்று
புத்திசொன்னாலும் “அதுதான்
உண்மை!” என்றது அனுபவம்

“சுரிக்குளத்தில் கால்சிக்கிய 
முதலைபோல”
நெஞ்சமோ 
விடையறியாக்
கேள்வியோடு இழுபறியாய்.!

உண்மையான உண்மை
உண்மைக் காதலிலுள்ளான
உண்மைக்கு எப்பொழுதும்
உயிரிருக்கும்!

பிரியலாமென்று முடிவெடுக்கில்
மலையுச்சியில் நிறுத்தி - அது
மயிர்க்கூச்செறிய மீட்டும்.!

கூடியிருந்த நாட்களை..
மகிழ்ந்து சிரித்த நொடிகளை..
பதிந்துவைத்த சுவடுகளை..

உலகின் அதிசயமே
பலகோடிச் சனத்திலிருவர்
“உனக்குநான் எனக்குநீ”
என்னும் பந்தமல்லவா?

இல்லை கேட்கிறேன்..!!
ஒட்டாத சரீரங்கள் ஒன்றாய்ப்
பயணிக்க மரணத்தின் நாளை
நிர்ணயிப்பது சாத்தியமா.?

நிச்சயம் முடியும் - அது
காதலால் மாத்திரமே முடியுமென்று
காதலின் ஞாபகப் பக்கங்களால்
நிரூபணமே!

இருந்தும்..
அவளைக் காணவில்லை
தீர்க்கமாய்த் தேடியும் காணவில்லை
என்னெல்லைக்குள்.!

ஓய்ந்து நான்
உக்கார்ந்தேன்
வெள்ளிபூத்த ஓரிரவு
வானம் பார்த்து
புண்பட்டு நெஞ்சம்
புலம்பியபடி.!

அம்புலியில் அங்கோர்
வெள்ளை நிழல்.!!
அடக்கிராதகியே..!!
எங்கெல்லாம் தேடுக்கிறேன் - நீ
ஒளிந்திருப்பது நிலவின் முதுகிலா.!?

~~~~~~***~~~~~~

வரிகள்: சிறி ஆரோன்



முச்சீரிரட்டைச் சமனிலைச் சிந்து

பகிரன்பு தானே - இன்
நாளும் மனிதரிங்கு தங்க
இல்லாப் பிரிவினைகள் சூட - மாண்பு
இங்கே எதுவாக நீளும்?

வரிகள்: சிறி ஆரோன்

******************

அஞ்சி யடங்காத வாழ்வை - என்
      அன்னை எனக்கருள வேண்டும்
கொஞ்சு தமிழ்மறந்த போதே - கொடுங்
     கூற்றுக் கிரையாக வேண்டும்.
              - பாவலர் மா.வரதராசன்-

கருத்தூன்றுக :
மேற்கண்ட பாடல் வகை "முச்சீரிரட்டைச் சமனிலைச் சிந்து"ஆகும். 

அளவொத்த மும்மூன்று சீர்களைக் கொண்ட இரண்டடிகள் என்பது இதன்பொருள்.

அளவொத்த என்பதனால் முதலடியில் அமையும் விதத்திலேயே இரண்டாமடியிலும் சீர்கள் அமைய வேண்டும்.

இரண்டடிகளும் சமமான சீர்களைக் கொண்டிருந்தால் அது 'சமனிலைச் சிந்து' என்றும், சமமற்ற சீர்களைக் கொண்டிருந்தால் அது ' வியனிலைச் சிந்து' என்றும் குறிக்கப்படும். 

சான்று பாடல். . .
மா/காய்/மா   என்ற ஒழுங்கில் அமைந்த சமனிலைச் சிந்து ஆகும். (பயிற்சி ஒழுங்கிற்காக இதையே நீங்கள் எழுதவும்)

பாரதியாரின்
 ஓடி விளையாடு பாப்பா .. .
வெள்ளை நிறத்தொரு பூனை....
மலரின் மேவுந் திருவுடையாள் ...
போன்றன இவ்வகையே.

மிகமிக எளிதானது இந்தப் பாடல்வகை.

பொது இலக்கணம் :
********************
மேற்கண்ட பாடலின்படி...
* மூன்று சீர்களைக் கொண்ட இரண்டு அரையடிகளைக் கொண்டது ஓரடி.
* அஞ்சி ...என்பது முதல் வேண்டும்...என்பது வரை ஓரடி. 
கொஞ்சு... என்பது முதல், வேண்டும்...என்பது வரை மற்றோரடி.
* இரண்டடிக்கும் எதுகை அமைய வேண்டும். (அஞ்சி, கொஞ்சு) 
* 1- 4 ஆம் சீர்கள் அதாவது மடங்கிவரும் அரையடியில்  மோனையால் இணைந்து (அ,அ, - கொ, கூ)
* முதலிரு சீர்களும் வெண்டளை அமைய வேண்டும்.

- பாவலர் மா.வரதராசன்-
ஆசானின் பாடவிதானம்

கிளிக்கண்ணி

வாழ்வு கசந்தேகி 

     வாட்டுமே பெண்ணியத்தில்

தாழ்வுத் துயரமற - கிளியே 

      தாய்வரம் நீவாராய்!

                     வரிகள்: சிறி அருணன்

                 *****************

தெள்ளு தமிழ்மொழியைத் தீயவன் பேசினாலும்

உள்ளம் குழையுதடி - கிளியே

    உன்மத்தம் ஆகுதடி

              - பாவலர் மா.வரதராசன்-

கருத்தூன்றுக :

மேற்கண்ட பாடல் வகை "கிளிக்கண்ணி"ஆகும்.

மிகமிக எளிதான இந்தப் பாடல் வகையைப் பாரதிக்கு முன்பு அழுகுணிச்சித்தர் இயற்றியுள்ளார். அவருடைய பாடல் நான்கடிகளைக் கொண்டது.

"மூலப் பதியடியோ முன்னிரண்டு வாசலடி" என்ற பாடல்.

சான்று பாடலோ இரண்டடிகளைக் கொண்டது.

இந்த வகையை முதலில் காட்டியவர் பாரதியாகத்தான் இருக்க முடியும். பாரதியின்

"நெஞ்சில் உரமுமின்றி. . . என்ற பாடல் இந்த வகையே.

ஏட்டையா அம்பாசமுத்திரம் சுப்பராய சாமிகளின் மிகப் புகழ்பெற்ற

வள்ளிக் கணவன்பேரை.  . ..என்ற பாடலும் இந்த வகையே.

கிளிக்கண்ணி, நெஞ்சுக்கண்ணி, புலிக்கண்ணி, பாம்புக்கண்ணி போன்ற பலவகைகளில் இப்பாடல் அமையும்.

தனிச்சீரில் முன்னிலையாக அமையும் பாடுபொருளின் பெயராலேயே இவற்றுக்குப் பெயரமையும்.

கிளியை முன்னிறுத்தியதால் கிளிக்கண்ணியாயிற்று. இதேபோல், 

பாம்பை முன்னிறுத்தின் பாம்புக்கண்ணி எனப்படும். இதேபோல் மற்றவற்றிற்கும் கொள்க.


பொது இலக்கணம் :

********************

மேற்கண்ட பாடலின்படி...

* நான்கு சீர்களைக் கொண்ட இரண்டு அரையடிகளைக் கொண்டது ஓரடி.

* தெள்ளு...என்பது முதல் பேசினாலும்..என்பது வரை ஓரடி.

உள்ளம்... என்பது முதல், ஆகுதடி...என்பது வரை மற்றோரடி.

* இரண்டடிக்கும் எதுகை அமைய வேண்டும். (தெள்ளு, உள்ளம்)

* 1- 3 ஆம் சீர்கள்  மோனையமைய வேண்டும். (தெ- தீ, உ-உ)

* ஓரடியின் நான்கு சீர்களும் வெண்டளை அமைய வேண்டும்.

* இரண்டாமடி இரண்டிரண்டு சீர்களான அரையடிகளாக அமைந்தும்,

* அவ்வாறு மடங்குமிடத்தில் மோனையமைந்தும்,

* இரண்டாமடியின் மூன்றாவது சீராகக் #கிளியே என்னும் முன்னிலைத் தனிச்சீரும் அமைந்தும்,

* தனிச்சீருக்கும் முன்னும் பின்னும் வெண்டளை கட்டாயமில்லாமலும்.  . .ஆனால் தனிச்சொல்லை நீக்கிப் பார்ப்பின் நான்கு சீர்களும் வெண்டளையமைந்தும். . .

* தனிச்சீருக்கு முன்னுள்ள அரையடி வினைமுற்றாய் இருப்பதே பெரும்பான்மை. அதுவே சிறப்பான இசையைத் தரும். 

இந்த இலக்கணப்படி அமைவது "கிளிக்கண்ணி" எனப்படும்.

அடியின் தொடக்கம் தேமாச்சீராக அல்லது கூவிளச்சீராக  அமைந்தால் பாடும் சந்தம் சிறப்பாக அமையும்.

✍️பாவலர் மா.வரதராசன் அவர்களின் பாடவிதானம்

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...