வாழ்வு கசந்தேகி
வாட்டுமே பெண்ணியத்தில்
தாழ்வுத் துயரமற - கிளியே
தாய்வரம் நீவாராய்!
வரிகள்: சிறி அருணன்
*****************
தெள்ளு தமிழ்மொழியைத் தீயவன் பேசினாலும்
உள்ளம் குழையுதடி - கிளியே
உன்மத்தம் ஆகுதடி
- பாவலர் மா.வரதராசன்-
கருத்தூன்றுக :
மேற்கண்ட பாடல் வகை "கிளிக்கண்ணி"ஆகும்.
மிகமிக எளிதான இந்தப் பாடல் வகையைப் பாரதிக்கு முன்பு அழுகுணிச்சித்தர் இயற்றியுள்ளார். அவருடைய பாடல் நான்கடிகளைக் கொண்டது.
"மூலப் பதியடியோ முன்னிரண்டு வாசலடி" என்ற பாடல்.
சான்று பாடலோ இரண்டடிகளைக் கொண்டது.
இந்த வகையை முதலில் காட்டியவர் பாரதியாகத்தான் இருக்க முடியும். பாரதியின்
"நெஞ்சில் உரமுமின்றி. . . என்ற பாடல் இந்த வகையே.
ஏட்டையா அம்பாசமுத்திரம் சுப்பராய சாமிகளின் மிகப் புகழ்பெற்ற
வள்ளிக் கணவன்பேரை. . ..என்ற பாடலும் இந்த வகையே.
கிளிக்கண்ணி, நெஞ்சுக்கண்ணி, புலிக்கண்ணி, பாம்புக்கண்ணி போன்ற பலவகைகளில் இப்பாடல் அமையும்.
தனிச்சீரில் முன்னிலையாக அமையும் பாடுபொருளின் பெயராலேயே இவற்றுக்குப் பெயரமையும்.
கிளியை முன்னிறுத்தியதால் கிளிக்கண்ணியாயிற்று. இதேபோல்,
பாம்பை முன்னிறுத்தின் பாம்புக்கண்ணி எனப்படும். இதேபோல் மற்றவற்றிற்கும் கொள்க.
பொது இலக்கணம் :
********************
மேற்கண்ட பாடலின்படி...
* நான்கு சீர்களைக் கொண்ட இரண்டு அரையடிகளைக் கொண்டது ஓரடி.
* தெள்ளு...என்பது முதல் பேசினாலும்..என்பது வரை ஓரடி.
உள்ளம்... என்பது முதல், ஆகுதடி...என்பது வரை மற்றோரடி.
* இரண்டடிக்கும் எதுகை அமைய வேண்டும். (தெள்ளு, உள்ளம்)
* 1- 3 ஆம் சீர்கள் மோனையமைய வேண்டும். (தெ- தீ, உ-உ)
* ஓரடியின் நான்கு சீர்களும் வெண்டளை அமைய வேண்டும்.
* இரண்டாமடி இரண்டிரண்டு சீர்களான அரையடிகளாக அமைந்தும்,
* அவ்வாறு மடங்குமிடத்தில் மோனையமைந்தும்,
* இரண்டாமடியின் மூன்றாவது சீராகக் #கிளியே என்னும் முன்னிலைத் தனிச்சீரும் அமைந்தும்,
* தனிச்சீருக்கும் முன்னும் பின்னும் வெண்டளை கட்டாயமில்லாமலும். . .ஆனால் தனிச்சொல்லை நீக்கிப் பார்ப்பின் நான்கு சீர்களும் வெண்டளையமைந்தும். . .
* தனிச்சீருக்கு முன்னுள்ள அரையடி வினைமுற்றாய் இருப்பதே பெரும்பான்மை. அதுவே சிறப்பான இசையைத் தரும்.
இந்த இலக்கணப்படி அமைவது "கிளிக்கண்ணி" எனப்படும்.
அடியின் தொடக்கம் தேமாச்சீராக அல்லது கூவிளச்சீராக அமைந்தால் பாடும் சந்தம் சிறப்பாக அமையும்.
✍️பாவலர் மா.வரதராசன் அவர்களின் பாடவிதானம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக