வெள்ளி, 8 நவம்பர், 2024

நேரிசைப்பா வெண்பா

புயல் மழை

~~~***~~~

எங்கோ வுருவான உக்கிரசங் காரமது

தங்கித் தரியாப் புயலாய்-இங்கே

மண்குளிர மாமக்கள் அக்களித்தே ஆனந்தம்

விண்ணதிரக் கொட்டும் மழை! 

~~~~~~***~~~~~~

வரிகள்: சிறி ஆரோன்



புதன், 6 நவம்பர், 2024

பூநகரி மாடு கட்டிப் பூவரசங்குளம் ஏரு பூட்டி

சிற்றூர்க் கவிதை
~~~~~***~~~~~~

பூநகரி மாடு கட்டிப் 
பூவரசங்குளம் ஏரு பூட்டி உழவே/
புன்னைப் போடியார் வெளிக் கிட்டினார் 
பொழுதோடே சிறாம்பி இறங்கி//

சாலையில் சாடையான நிலவொளி
செவலைகள் பொடிநடை சோடிபோட்டு/
சொருகிய வெத்திலைப்பை இடுப்பிலாட
சீறும் சுருட்டுப்புகையோடு செருமலும்//

வெள்ளணப் புறப்பட்டே வயக்காடுவந்து
வரவைக்குள் நீரோடமண் வெட்டியடிச்சு/
விவசாயி படும் பாட்டில குளிருங் கூதலும்
வெக்கித் தலைகுனியும் வீரியமிழந்தே!//

பனையடி வெள்ளாமநிலம் பண்படுத்தி
பத்திரமா உரமெறிஞ்சு பாதுகாத்து/
பருவத்தில் நீரிறுத்துப் பதம்பாத்து
பக்குவமா களை பீடையும் பிடுங்கிடுவர்//

கொக்குங் குருவிகளும் கத்துங்கீதம்
கொள்ளவடிவு மயிலகவும் ஓசையும் இங்கே/
கொதிக்கும் வெயிலும் கூனிக் குறுகும் 
கோடை மாரியெண்டு பாராக் கோமகரால்//

இலாபநட்டக் கணக்கு இன்னதென்று அறியார்
ஈகைக்கு இலக்கணமே இவரல்லோ?/
இரத்தமும் வேர்வையும் இவருடம்பில்
சுரப்பது தேத்தண்ணியில இருந்தாமே!?//



~~~~~~~***~~~~~~~
கதைவடிவில்👇🏼

ஊர்க்கோழி கூவுமுன்னே
சிறாம்பி இறங்கி
காலைக் கடனிறுக்க 
ஆதாரம் அரிக்கேன் வெளிச்சம்

விடிஞ்சும் விடியாமல்
வெள்ளணப் பனிக்கூதலிலும் 
சுறுசுறுப்பாய்ச் சுழன்று
ஒத்தைத் தோள்ப்பட்டை மட்டும்
மூடித்தொங்கும் மேல்ச்சட்டை

காதிடுக்கில் பத்திரங்காத்த
குறைச்சுருட்டுக் கொளுத்தி
தெம்புக்கு ஒரு இழுப்பிழுது

முடிச்சு சொருகிய 
வெத்திலைப் பொட்டலம் 
இடுப்பில் இங்குமங்கும்
அசைவாட “அடடா.. பாவம்
தீர்ப்பெழுதாமலே அதுக்குத் தூக்கு!”

பூநகரி மாடு கட்டிப் 
பூவரசங்குளம் ஏரு பூட்டி 
வெளிக் கிட்டினார் பொழுதோட
புன்னைப் போடியார் 

இரட்டைச் செவலைகளும்
சைகை சொல்லும் வாயசைய
கழுத்துமணி அசைச்சி அசைச்சி.. 
வந்தாச்சி பனையடி வயல்க்காடு.!

“உச்சிவெயில் 
ஏறும் முன்னே
உழுது முடிச்சாகனும்
வச்சி வச்சிப் பிசைய நேரமில்ல”
உறுக்கி விரட்டியபடி “கோய் கோய்..”

தூரத்தில் மயிலகவும் 
கொக்கும் குருவிகளும் 
புழுநோண்டப் போக்கும் வரத்துமாய் 
சேத்தில பட்டும் படாம நடந்து
இரைகாவுதல் தனியழகு

மெல்லிய குளிர்காத்து 
முகத்திலுரசப் சில்லிடுமே!
இருந்தும்..
ஈரம்புதையும் கால்களுக்கு 
சேத்தில் லேசான சூடுகிட்டும் 
புதினமென்னவோ.?

அடுத்தவயல் அப்புக்குட்டி 
கூவிக் கதபேச..
கொடுப்புக்குள் சிரிச்சு
வெத்தில எச்சில் புளிச்சென
“சும்மா கிடப்பா உனக்குவேற வேலையில்ல..!”

ஓலைத்தொப்பி 
சூடேறி வியர்த்துக் கொட்ட
ஒருபாடாய் பழங்கஞ்சி 
ஞாபகம் பனைநிழ லொதுங்கிக் 
கொஞ்சம் இளைப்பாறி
இடைக்கிட தேத்தண்ணி!

மாலை படுமட்டும் 
பாடுபட்ட மாமனிசன்
வீடுபோகும் முன்ன
ஒருசுற்று கிறுக்கிப் பார்த்து..
“உலகச்சனம் பசியாற 
ஏவளவு பாடுடா சாமி” யெண்டு 
பொருமூச்சி விட்டுக் கிளம்பினார்
மனநிறைவோட.

~~~~~~***~~~~~~~
வரிகள்: சிறி ஆரோன்

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...