வியாழன், 3 அக்டோபர், 2024
அன்னையே அவனியில் தெய்வம்
அன்னையே நீ
அன்பில் தெளிதேன்
என்பேன்
*
என் கருவுருவைக்
கண்காணும் முன்னே எனை
நீக்கமற நேசித்தவள் நீயே!
*
என்னிதையத் துடிப்பினை
உள்ளார உணராத கணங்கள்
துடிதுடித்துப் போவாய்
*
வயிறுள்ளே
என் எத்தலுக்கும் துள்ளலுக்கும்
கண்ணைச் சுருக்கிப்
புன்னகையோடு வலிகடந்தாய்
*
என்னுருவம் செம்மையாக
பத்தியங்கள் பொறுத்து
தூக்கந் தொலைத்துச்
சுமை தாங்கிய தேவதாயே!
*
ஒப்பனைத் திரவியங்கள் பூசி
பத்திரமாய்க் காத்த மேனியதை
எனக்காய் உருக்குலைய ஏற்றாயே!
*
பிண்டத்தை பீறிடும் பிரசவ வலியை
என்பேரில் சகித்ததை
எண்ணி எண்ணியே
மெய் சிலிர்க்கிறேன்!
*
முப்பொழுதும் எனை
உருவாகும் கற்பனையில்
உன் வாழ்நாள்களை
கிரையந் தந்தாயே!
*
எவர் என்மீது முறுமுறுக்கினும்
கோழிதன் செட்டைக்குள்
மூடும் குஞ்சாய்க் காத்த
அருந்தவமே
*
உன் திராணிக்கு மிஞ்சும்
என் ஆசைகளுக்கு
‘நாளைக்கு’ என்ற நம்பிக்கையின்
மறுமொழி கொடுத்தவளே
*
வாழ்க்கை வெறுத்த
சூழ்நிலைகளில் என் முகங்கண்டு
எனக்காய்ப் பாடுகள் பொறுத்து
சாதலை மறுத்த சகியே
*
வாழ்வுதன் ஏற்ற இறக்கங்களில்
சறுக்காது ஓடிட
மலையாட்டின் கால்களைப் போல்
நெஞ்சுரத்தை எனக்கு
தாய்ப்பாலில் ஊட்டிய தமிழிச்சியே
*
உன்னதத்தினின்று
எனக்காய் இறங்கிய
தீரா நேசமவள் எப்பொழுதும்
என் அவனியில் தெய்வம்
திங்கள், 30 செப்டம்பர், 2024
கைவண்ணத்துக்கு ஒரு கவிதை!
சூம்பிப்போன
இலங்கைதீவில் செஞ்சுடர்
நல்லுதயம் மெது மெதுவாய்..
*
இருட்டுக் குகையிலிருந்து
ஒரு கலைஞன் காணும்
ஒளி வெளிப்படும் அழகு!
*
முட்டிக் கால்வரை
கம்பிகள் தடைதெரியும்
அது சட்ட இறுக்கங்களின்
நல் உவமையாய்!
*
உச்சியில் கோணிய
துருப்பிடித்த பழைய கம்பியொன்று
மதவாதக் கொள்கையாய்
கண்டாலும் பறவாயில்லை!
*
பேரொளியது
பொருளாதார வெறுமைச் சமுத்திரம்
ஊழலெனும் மலை முகடுகள்
தாண்டி வந்தடையும் நிச்சயம்
*
நமது தேசத்தின்
உருவம் சீராகும் சீக்கிரமென்று
உறுதியோடு காத்திருப்போம்
உழைப்பவன் வழிசார்ந்து!
***
கவிவரிகள்: சிறி ஆரோன்
நன்றி புகைப்படம் சகோ ரஜினி
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
பழுதிலா வாழ்வே பலம்.!
(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...

-
தமிழுக்கு என்னைத் தின்னக் கொடுத்தேன் மிச்சமின்றி எச்சமின்றி! எத்தனை எத்தனை கருத்தாய் வெற்று நினைவுகளை உறிஞ்சி வரிகளாய் வடிக்கிறாள் இலக்கணமும...
-
தங்கத்தில் சரிகை நெய்து என்மேனி போர்த்துமையா, வெள்ளியில் தட்டெடுத்து என்னை நீ தாங்குமையா என்றெனை ஒருக்காலுங்கேளா இல்லாட்டியே. * கூழோ கஞ்சி...
-
மானுடர் சீக்கு அறுந்து சீருடன் சீவனம் கொள்ள ஆருட ஞ்சொல்ல சுகமேகும், கைமருந் அதுவே காயமாற்றும், பூசாரியே ஏகபரிகாரி - என்று ரணமேகிய இருள் வாழ...