வியாழன், 3 அக்டோபர், 2024

அன்னையே அவனியில் தெய்வம்


முதல் : அன்னையே
முடிவு : அவனியில் தெய்வம்
**************************
அன்னையே நீ
அன்பில் தெளிதேன் 
என்பேன்
*
என் கருவுருவைக் 
கண்காணும் முன்னே எனை 
நீக்கமற நேசித்தவள் நீயே! 
*
என்னிதையத் துடிப்பினை 
உள்ளார உணராத கணங்கள் 
துடிதுடித்துப் போவாய்
*
வயிறுள்ளே 
என் எத்தலுக்கும் துள்ளலுக்கும் 
கண்ணைச் சுருக்கிப் 
புன்னகையோடு வலிகடந்தாய்
*
என்னுருவம் செம்மையாக
பத்தியங்கள் பொறுத்து 
தூக்கந் தொலைத்துச் 
சுமை தாங்கிய தேவதாயே! 
*
ஒப்பனைத் திரவியங்கள் பூசி 
பத்திரமாய்க் காத்த மேனியதை 
எனக்காய் உருக்குலைய ஏற்றாயே!
*
பிண்டத்தை பீறிடும் பிரசவ வலியை 
என்பேரில் சகித்ததை 
எண்ணி எண்ணியே
மெய் சிலிர்க்கிறேன்!
*
முப்பொழுதும் எனை 
உருவாகும் கற்பனையில் 
உன் வாழ்நாள்களை 
கிரையந் தந்தாயே!
*
எவர் என்மீது முறுமுறுக்கினும் 
கோழிதன் செட்டைக்குள் 
மூடும் குஞ்சாய்க் காத்த 
அருந்தவமே
*
உன் திராணிக்கு மிஞ்சும் 
என் ஆசைகளுக்கு
‘நாளைக்கு’ என்ற நம்பிக்கையின் 
மறுமொழி கொடுத்தவளே
*
வாழ்க்கை வெறுத்த 
சூழ்நிலைகளில் என் முகங்கண்டு 
எனக்காய்ப் பாடுகள் பொறுத்து 
சாதலை மறுத்த சகியே
*
வாழ்வுதன் ஏற்ற இறக்கங்களில் 
சறுக்காது ஓடிட 
மலையாட்டின் கால்களைப் போல் 
நெஞ்சுரத்தை எனக்கு 
தாய்ப்பாலில் ஊட்டிய தமிழிச்சியே
*
உன்னதத்தினின்று 
எனக்காய் இறங்கிய 
தீரா நேசமவள் எப்பொழுதும் 
என் அவனியில் தெய்வம்
***
சிறி ஆரோன்



கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...