செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

நெஞ்சோடு சுமந்து நித்தம் வாழ்வேனடி..!



தங்கத்தில் சரிகை நெய்து என்மேனி போர்த்துமையா, 

வெள்ளியில் தட்டெடுத்து என்னை நீ தாங்குமையா 

என்றெனை ஒருக்காலுங்கேளா இல்லாட்டியே.

*

கூழோ கஞ்சியோ குடிச்சாலும் 

கூடவே இருந்திடுங்க, 

திரைகடல் ஓடி நின்தேடுந் திரவியத்தே 

தன்னந்தனியாய் நானிங்கு தங்கத்தேரிழுத்தும் பயனென் என்றுரைத்த பாரியாளே.

*

காரியத்துக்குதவாத ஊதாரியென்று காரி உமிழ்ந்த சமூகமிதே, 

மாண்புடையோனிவன் சத்தியவாளன் எனத்தக்க(தாய்) - எனை

வனைந்த கயிங்காரிகயே.

*

என் கோபத்தின் நாழிகைகளில் பூக்குமுனது நிசப்தத்தின் அங்காரமும்,  

என்சத்தமடங்க நீகொடுக்கும் உன்சார்பு நியாயமனுவின் 

திதானமான கோரிக்கைகளும் 

நீதானோ கோமகள் என்றிடத்தோணும்.

*

என் உறவுகளோடு சமயோசித வார்த்தையால் ஜாலம் செய்து, 

சுற்றமறிந்து விட்டுக்கொடுக்கும்  - நீ இடம் ஏவல் புரிந்து சாதிக்கும் 

மந்திரக்கோலாகிய ‘இங்கிதம்’ அறிந்த இல்லத்தரசியே.

*

மனம்போன போக்கில் 

மாறுபாடான கூடுகையில்,

“வாதும் வழக்கும் வாலிபத்தின் வழக்கம்” என்ற துர்வியாக்கியான் எனைத் "தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்று கண்ணியப்படுத்திய கண்ணாட்டியே.

*

அதிகாலையே எழுந்தால் “

இன்னும் கொஞ்சம் தூங்கலாமே..” என்றமுனகல், அசதியில் கொஞ்சமதிகம் உறங்கிவிட்டாலும் “உடம்புக்கு என்னவோ..?” என்று 

பதபதைக்கும் என் அகமுடையாளே.

*

உலகமெலாம் சுற்றி ரகரகமாய் சுவைத்தாலும், அவசரவசரமாய் நீ சமைக்கும் தவிடவுக்கா பச்சரிசிச் சோற்றோடு முருங்கையிலைச் சொதியும், மீசைக்கெளுத்திக் குழம்புமாய் கைப்பக்குவத்தில் வசியங்கொண்ட அண்ணபூரணியே.

*

பணியிடக் காரியங்களின் முடிவு எட்டாத்தவிக்கும் என்புலம்பலின் ஈற்றில், போகிற போக்கில் நீசொல்லும் நச்சென்ற தீர்வுதனில் ஒருகணம் இஸ்தம்பித்து உச்சுக்கொட்டி மெச்சும் என் தலைக்கனம் பிடித்த முகாமையாளன் மூளையுனை ஞானாதாரமே!

*

காதலென்றுபலர் வாழ்க்கையில் வேதனையின் அனுபவங்களை (கற்றுக்)கொடுத்துவிட்டு போனதென்னவோ நிசம்தான்

இருந்தும் அத்தனை நிழலாட்டங்களும் இனிதாய் பலித்ததுபோல் 

என்னோடிருந்து என்னாலாகும் ரோதனைகளை தாங்குகையில் நீயென் தாயை மிஞ்சிய சீமாட்டியே.

*

பிரசவ நிமிசங்கள் உசிரை உருவாது மரணவலி காட்டும் என்பார்.! 

வியந்துபோனேன் அது அப்பழுக்கக்திற நிசமென்று, 

தாய்மையின் தியாகந்தனை மிஞ்சியொருசாரம் இப்பிரபஞ்சம் கண்டிருக்க வாய்ப்பேயில்லை சம்சாரமே.

*

தாய்மையது பூமியதன் பொறுமைக்கு ஒப்பபென்று கண்டேன் இவளிடத்தே!

என் குழந்தையவன் சுகயீனத்தே தனக்காம்பை கடித்தபடியே விடியவிடிய விம்மியழ, சலித்திடாது

தன்தோளிலும் மார்பிலும் ஓய்வின்றி சுமக்கும் அந்த நீளஇராத்திரிகளில் - இவளை ஆராரோ ஆராரிரோ.. இவளென்று கண்டேன் பெருமாட்டியாய்.

*

க(ன/ண)வான்களே..

தாயும் தகப்பனும் முற்பாதி,

பிள்ளைகளத்தனையும் இடைப்பாதி, சொந்தங்கள் தோழமையும் குறும்பாதி, மனைவியானவளே ஆண்சரீரத்தின் அதிபதியும்,  வாழ்வின் அந்தாதியுமாம் அவளைக் கைவிடாதீர் வலிகொடாதீர்.!

*

இவளே ஆணன்பில் தனைமறக்கும் 

அ(ன்/ப்)புராணியும், கண்ணியத்தில் இழுக்கெனில் தன்னாலாகும் சகலதுமென உக்கிர தோரணையின் ஒப்பிலா மகாராணியுமே ஆவாள்! 

*

அஃதே, இப்பேரண்டத்தின் படைப்பாளர் ஏவாளெனும் மனுசியை மனுசனிலிருந்து உருவகித்தார் - மண்ணாலுருவாக்கிய புருசனுக்கு துணையாய், ஆக பெண்ணியமே 

நீதான் மாமிசத்தினாலான முதல் மானுடம்.

*

என்னறிவிற்கு எட்டியவரை புனலின் அணுவில் உறங்கும் அனலும், 

அனலை அடக்கும் புனலும் 

ஒரேவாகம் என்றுணரும் பெண்சாதியுனை..

நெஞ்சோடு சுமந்து 

நித்தம் வாழ்வேனடி..!

***

வரிகள் சிறி ஆரோன்

(காதல் கவிதை)

கருத்துகள் இல்லை:

பழுதிலா வாழ்வே பலம்.!

(வெண்சீர் வெண்டளை) பிணியில்லாச் சீவியமே பிற்பாடு வாழ்வு பணியீர்ந்து செல்வம் பணிக்கும்! — வணிகம் அழுதாலும் போகாத அத்துணைவி மக்கள் பழுதிலா வாழ...