கண்ணுக்கெட்டிய தூரம்வரை
விடியலின் பக்குவமில்ல,
ஒருக்கால் விடிந்தாலும் என்னசெய்து
என்னகாண த(ரிசு)னிச்சீவியத்தில்
தனிக்கட்டையாய் என்றிருந்தேன்.!
*
கணபதியின் மகன் கனடாபோனால் போகட்டும்
என்றிராது எனது இளையவனை இங்கிலாத்து அனுப்பி; மூத்தவளையும் முன்வீட்டு பெருமைமீற ஒருநோஞ்சானை கைபிடிச்சு நோர்வேக்கு அனுப்பிவைத்தேன்.
*
நடுப்பிள்ளைதான் உருப்படாமல் போச்சுதென்று ஊரார் பேசக்கேட்டு சிங்கபூரில் படிக்கவைத்தேன், மூன்றே வருசத்தில் முடிவுசொன்னான் “
அங்குவந்து என்னசெய்ய சீனச்சியை நேசிக்கிறேன்” என்று.!
*
என் மனையாள் ஆயிரம்சொன்னாள்
கேக்கலயே நான், கிளிப்பிள்ளைக்கு போல பழமொழியும் “ஏங்க ஊர்பேச்சு உருவமில்லா பிசாசுபோல அதை வீட்டுக்குள் அண்டாதீங்க” அன்றவளை மடச்சியென்றும், ஊதியங்கேளா ஊழியச்சியென்றும் தரந்தாழ்த்தி திட்டினேன்.!
*
நேற்று உச்சிமுகர்ந்த ஊர்வாய்தான்
இன்றும் புறம்பேசுகிறது “
பேராசக்காரனிவன் பெருமைக்கு
பிள்ளைகளை கப்பலேத்திவிட்டு,
ஒத்தையா பெண்சாதிக்கு கொள்ளிவச்சிட்டு
திரியிறதப்பாரு!”
*
நேற்றோரு கடதாசி வந்தது மகளிடமிருந்து “அப்பா, நாக்குல பல்லப்போட்டு
நாலுவிதமாப் பேசுற அந்த நாலுபேர கட்டியழாம உங்கபேரப்பிள்ளைகளின் அன்புகாண இங்கயே வந்துருங்க, அடுத்தமாதம் எல்லோரும் சிலோன்வாறம்” ஆக என்..
கார்மேகம் கறுதிருச்சு காலநேரம் கனிஞ்சிருச்சி..
***
வரிகள்: ஸ்ரீ ஆரோன்
15-08-2024
ஈழத்து வளர்ந்துவரும் எழுதாளர் கழகத்தின் 5வது காதல் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது