பச்சிளம் குழந்தைகட்கு சாதியின்
பெயர் சொருகி கூடவே..
பாடசாலையின் நுழைவுப் பத்திரத்திலும்
சாதி__என்று நிரப்பிவிட்டு.!
"சாதிகள் இல்லையடி பாப்பா"என்று கற்பிக்கும்
முட்டாட்களின் உலகமிது !
<<>>
பெற்றோர்தம் குழந்தைகள் புலனெட்ட
புறம்பேசி, அறங்கோணி
கொடுவார்த்தைகளில் கேடுபுணர,
அந்தகாரத்தின் நடையேறுகளை
நாணமின்றி சரளம் புழங்கி,
மறந்தேனும் எவர்க்குமீணாது..
தன்பிள்ளையை ஒழுக்கசீலனாய் காணவெண்ணும்
முட்டாட்களின் உலகமிது !
<<>>
நீ யார்க்கும் நற்றுணை ஈணாய்- ஆனால்
உன் பட்சத்தில் நல் ஈவு வேண்டும்.
நீ யாரையும் தேற்றிடாய்;
உனக்கு உற்றசுற்றம் வசமேக வேண்டும் .
நீதிநியாயம் நீயறியாய்- இருந்தும்
உனை அநியாயம் ஏகிட ஒப்பிலாய்- அய்யகோ..
முட்டாட்களின் உலகமிது !
<<>>
எச்சில்க்கை நீண்டு நீ காக்கை விரசாய்- ஆனால்
உன்கை வானம்பார்க்க மறுகணம் நிரம்பிடனும்.
உன் துவாரக்குடம் பொற்சமானம்
பிறன் பொன்னது தெருக்களியாகிடுமோ.?
காக்கை உன்குஞ்சு பொன்னென்றால்
அன்னத்தின் குஞ்சென்ன அழுக்கா- அட
முட்டாட்களின் உலகமிது !
<<>>
சீவனோடு இருக்கும் காலமெல்லாம்
வார்த்தைக்காச்சும் சுகங்கேளாதவன்- நீ
பச்சைத்தண்ணீர் தானும் உறவுகட்கு பருக்கத்தராதவன்- நீ
இன்னான் செத்த பின்பு எதற்கு பெரும் படையலும்
பூப்பாடையும், ஓலமிட்டு முதலைக் கண்ணீரும் சொரிகிறாய்.?
முட்டாட்களின் உலகமிது !
<<>>
ஓடியோடி உழைத்து, உண்ணாது உறங்காது
உத்தமமாய்ப் படிக்கவைத்த பிள்ளைகளை
கண்டவரின் கால்பிடித்து தூரதேசம் அனுப்பிவைத்து
சாவையும்.. வாழ்வையும்.. தொலைபேசியில் அனுபவித்து
காகிதக்காசைக் கட்டிப்பிடித்து நீயுறங்கி;
ஊரெல்லாம் வாய்கிழிய பெருமைபேசி என்னப்பயன்
உன்சாவுக்கு வராத உறவால்?
முட்டாட்களின் உலகமிது !
<<>>